ஜல்லிக்கட்டு:வேளாண் பல்கலை. பதவியை ராஜினாமா செய்தார் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி தலைவர் சிவசேனாதிபதி
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களில் ஒருவரான காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான கார்த்திகேய சிவசேனாதிபதி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக தமிழகம் முழுவதும் காளை புரட்சி வெடித்துள்ளது. மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா, திருச்சி, கோவை ஈரோடு என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மெரினாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் மதுரை, சேலம், கோவையில் நடைபெற்று வரும் புரட்சியில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு பின்புலமாக இருந்து வரும் காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி தலைவரான கார்த்திகேய சிவசேனாதிபதி, ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார்.
இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக தமிழ்நாடு வேளாண்மை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிவசேனாதிபதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஜல்லிக்கட்டு தடை காரணமாக இந்தியாவில் 13 காளை இனங்கள் அழியும் நிலையில் உள்ளதாக கூறினார். நாட்டு இன காளைகளை அழிக்கவே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
This State Govt Officer resigned his job in Protest of conducting #Jallikattu #justiceforjallikatu #ChennaiMemes #Marinaprotest pic.twitter.com/RspqiQmZZG
— #SupportJallikattu🐂 (@sathvijay) January 21, 2017
மேலும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் ஆனால் அடுத்த வருடம் உறுதியாக சொல்ல முடியாது என சேனாதிபதி கூறியுள்ளார். மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த வெற்றி பெற்றுள்ளது எனவும் சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.