காமராஜர் ஆட்சி, தியாகம்னு பேசினா மட்டும் போதாது: கார்த்தி சிதம்பரம் பேச்சால் சலசலப்பு
சென்னை: தமிழகத்தில் காமராஜர் ஆட்சி, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்றெல்லாம் கடந்த கால சாதனைகளை மட்டுமே பேசி மக்களை சந்திக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கார்த்தி சிதம்பரம், ‘‘காமராஜர் ஆட்சி, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று கடந்தகால சாதனைகளை மட்டுமே பேசி மக்களை சந்திக்க முடியாது'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கூச்சல் எழுப்பினர். அவரைத் தொடர்ந்து பேசிய தேசிய செயலாளர் செல்லக்குமார், தமிழகத்தில் காமராஜரின் தியாகத்தை ஒதுக்கிவிட்டு கட்சி நடத்த முடியாது. 2-ம் வகுப்புகூட படிக்க முடியாத நிலையில் இருந்த காமராஜர் காங்கிரஸை வளர்க்க அரும்பாடுபட்டார்' என்று கார்த்தி சிதம்பரத்துக்கு பதிலடி கொடுத்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லக்குமார், மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் என்று படிப்படியாக வருபவர்களுக்குதான் காங்கிரஸ் வரலாறு தெரியும். குறுக்கு வழியில் வருபவர்களுக்குத் தெரியாது. இது ராகுல் காந்தியே சொன்னது. இது இப்பிரச்சினைக்கும் பொருந்தும் என்றார்.