ராமதாஸ் வீட்டு திருமணம்: தமிழ் போல் தழைத்து வாழ மணமக்களை வாழ்த்திய கருணாநிதி
சென்னை: தாத்தா என்ற முறையில் உரிமையோடு டாக்டர் ராமதாஸ் இல்லத் திருமணவிழாவில் பங்கேற்றதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார். மணமக்கள் தமிழ் போல் தழைத்து என்றும் வாழ்க எனவும் அவர் வாழ்த்தினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி ஆகியோரின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்-சௌமியா அன்புமணி ஆகியோரின் மகளுமான சம்யுக்தா, டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரனும், வ.இ.ஜெயராமன்-சுப்புலட்சுமி ஆகியோரின் மகன் வழி பேரனும், பரசுராமன்-ஸ்ரீகாந்தி ஆகியோரின் மகனுமான ப்ரித்தீவன் பரசுராமனுக்கும் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் பூஞ்சேரியில் கான்ப்லூயன்ஸ் பாங்க்குயிட்ஸ் ரிசார்ட் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களை டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி, டாக்டர் அன்புமணி ராமதாஸ்-சௌமியா, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி-சித்ரா கிருஷ்ணசாமி, ஜெ.பரசுராமன்-ஸ்ரீகாந்தி பரசுராமன் ஆகியோர் வரவேற்றனர்.
திருமண விழாவிற்கு இன்று காலை சென்ற திமுக தலைவர் கருணாநிதி மணமக்களை வாழ்த்தினார்.
திமுகவின் முக்கிய தலைவர்கள் துரைமுருகன்,டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி ஆகியோறும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் மணமக்களை வாழ்த்தி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:
தாத்தாவின் வாழ்த்து
இங்கே மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தம் எடுத்துக் கொண்ட போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்த்துக்களோடு என்று குறிப்பிட்டார்கள்.
முன்னாள் முதல்வர் என்று அழைப்பதை விட தாத்தா என்று அழைத்து இருந்தால் இன்னும் பெருமைப்படுவேன்.
நீண்ட கால பந்தம்
இந்த குடும்பத்தோடு நீண்ட நெடுநாட்கள் தொடர்பு கொண்டவன். அந்த வகையில் ஒரு தாத்தாவாக இருந்து அன்பு செல்வங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கும், டாக்டர் ராமதாசுக்கும் இன்று நேற்றல்ல, பல்லாண்டு காலமாக நெருங்கிய பழக்கம் உண்டு.
எங்களுக்குள் கோப, தாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் எங்களுக்குள் இருக்கும் அன்பு என்றும் குறைந்ததில்லை.
உடல் வலியிலும்
உடல் நிலை சரியில்லாத நிலையில் இன்றுநான் வரமுடியுமா? என்று இருந்தேன். அதற்காகத்தான் மு.க.ஸ்டாலினை அனுப்பி எனது வாழ்த்துக்களை கூறி விடுமாறு சொல்லி இருந்தேன்.
ஸ்டாலினும் நீங்களும் செல்லுங்கள் என்று கூறினார். உடல் வலியையும் பொருட்படுத்தாமல் இன்று இந்த விழாவில் கலந்து கொண்டேன்.
வாழ்க்கை ஒப்பந்தம்
மணமக்கள் மணவிழா ஒப்பந்தத்தை படித்த போது பெரியாரும், அண்ணாவும் எந்த வகையில் மணமக்கள் இருக்க வேண்டும் என்றார்களோ, அந்த நிலை கொஞ்சமும் மாறாமல் வாழ்க்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
உரிமையோடு வாழ்த்துகிறேன்
இந்த விழாவுக்கு நான் வரவேண்டும் என்று டாக்டர் அழைத்த போது, நீங்கள் அழைத்தா நான் வரவேண்டும். என் பேத்தி திருமணத்துக்கு நீங்கள் அழைக்க வேண்டுமா? என்று உரிமையுடன் கூறினேன். அந்த உரிமையுடன் மணமக்களை வாழ்த்துகிறேன்.
தமிழ்போல் தழைக்க
இந்த மண விழாவில் பாட்டாளி சொந்தங்களையும், எனது நண்பர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தார், இயக்கத்தார் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மணமக்கள் தமிழ் போல் தழைத்து என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தினார் கருணாநிதி.