எம்.எல்.ஏ.வாக 60 ஆண்டுகாலம்... சட்டசபையின் வைரவிழா நாயகன் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி 13 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியதன் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. வைர விழா எம்எல்ஏ என்ற பெருமை பெற்றுள்ளார் கருணாநிதி.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி 5 முறை முதல்வர் என்ற பெருமை பெற்றதோடு தற்போது எம்எல்ஏவாக வைரவிழா கண்டுள்ளார். அவர் எம்எல்ஏவாக பதவியேற்று இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
வைர விழா கண்ட தமிழக சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எம்.எல்.ஏ.வாகி இன்று வைர விழா காண்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் மிக மூத்த அரசியல்வாதி. கலை, இலக்கியம், எழுத்தாற்றல், பேச்சாற்றல் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். அரசியலில் பல தலைமுறை பிரதமர், முதல்வர்களை கண்டவர் என்ற பெருமைக்குறியவர் கருணாநிதி.
திருக்குவளை நாயகன்
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனைகளை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. 1924 ஜூன் 3ஆம் திருக்குவளையில் பிறந்து தனது 14 வயதிலேயே நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 93 வயதிலும் தமிழக அரசியல் வரலாற்றில் தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார். திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்து வருகிறார்.
வைரவிழா நாயகன்
இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமிழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனை படைத்த கருணாநிதி மற்றொரு சாதனையையும் நிகழ்த்தி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏவாக பதவியேற்று இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எம்எல்ஏ
1957ஆம் ஆண்டு மார்ச் மாதம் குளித்தலையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 1ஆம் தேதியன்று சட்டசபைக்குள் எம்எல்ஏவாக நுழைந்தார். அது முதல் வெற்றி தேவதை கருணாநிதியை அரவணைத்துக்கொண்டாள்.
தொடர் வெற்றிகள்
அதன் பிறகு 1962ல் தஞ்சாவூர், 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977, 1980ல் அண்ணாநகர், 1989, 1991ல் துறைமுகம், 1996, 2001, 2006ல் சேப்பாக்கம், 2011, 2016 தேர்தல்களில் திருவாரூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
பதவி ராஜினாமா
எம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 1991 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபை நாயகன்
கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ 2 ஆண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சர், 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவி என்று தமிழக சட்டமன்ற வரலாற்றில் தனி இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆட்சியின்போது அவரது சட்டசபை பொன்விழா ஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டசபை பொன்விழா வளைவு அமைக்கப் பட்டதுடன், கலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது
உடல்நலக்குறைவு
வைரவிழா காணும் கருணாநிதி கடந்த 5 ஆண்டுகளாகவே சட்டசபைக்குள் நுழையவில்லை. காரணம் அவரது நாற்காலி செல்ல இடவசதியில்லை என்ற காரணத்திலேயே அவர் செல்லவில்லை. தனது சொந்த தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட கருணாநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாவே அவர் ஓய்வில் இருக்கிறார். வைரவிழா காணும் இந்த நேரத்தில் அவர் திமுக தொண்டர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சட்டசபையில் குரல் ஒலிக்கும்
தமிழக சட்டசபை வரலாற்றில் வைரவிழா காணும் கருணாநிதியின் பணி என்றென்றும் மிளிரும் என்று அவரது மகனும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நலம் பெற்று சட்டசபையில் அவரது குரல் ஒலிக்கும் என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார். 13 முறை ஒரே கட்சியில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்ற தலைவர் நாட்டில் வேறு யாரும் இல்லை என்றும் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். வைரவிழா நாயகனின் குரல் மீண்டும் சட்டசபையில் ஒலிக்கவேண்டும் என்பதே அவரது தொண்டர்கள், அரசியல் ஆர்வலர்களின் விருப்பமாகும்.