ஜெ. கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதாக பொய் பேசி வருகிறாரே? - கருணாநிதி
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிரச்சாரக் கூட்டங்களில், அவர் கொடுத்த வாக்குறுதிகளை யெல்லாம் நிறைவேற்றி விட்டதாகத் தொடர்ந்து பொய் பேசி வருகிறாரே? என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2011ஆம் ஆண்டு, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அவர் அளித்த வாக்குறுதிகளையும், சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்களையும் அவர் நிறைவேற்றவில்லை என்று பல முறை நான் தெரிவித்து, அவை தொடர்பாக சில கேள்விகளையும் எழுப்பியிருந்தேன்.
ஜெயலலிதா இது வரை குறிப்பான என்னுடைய கேள்விகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. திசை திருப்பிடும் வகையில் ஏதேதோ பொய்களைச் சொல்லி ஏமாற்ற முயற்சி செய்து வருகிறார்.
வாக்குறுதி எதையும் அவர் நிறைவேற்ற வில்லை என்று "ஸ்டேட்ஸ்மென்" ஆங்கில நாளேடு தலையங்கமே எழுதியிருக்கிறது. அதில், "ஜெயலலிதாவின் வாக்குறுதிகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது அந்தக் கட்சியின் சார்பில் அளித்த தேர்தல் அறிக்கையில் 54 வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 10 சதவிகித வாக்குறுதிகளைக் கூட ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமேயானால், 300 மெகாவாட் திறன் கொண்ட பத்து சோலார் மின்சார மையங்களை அமைக்கப் போவதாக ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அது வெறும் காகித வாக்குறுதியாகவே முடங்கிவிட்டது. மின்சாரத் திருட்டைத் தடுப்பதற்கு இராணுவத்திலிருந்து பதவி ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு வலிமை மிகுந்த ஒரு படையை அமைக்கப் போவதாகச் சொன்னார். முன்னாள் ராணுவ வீரர்கள் அதை ஆவலோடு எதிர்பார்த்தது தான் மிச்சம். வாக்குறுதி அளித்தபடி எந்தப் படையையும் ஜெயலலிதா அமைக்கவில்லை.
மேலும் ஜெயலலிதா சட்டப் பேரவை விதி 110இன் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் 187 அறிவிப்புகளைச் செய்திருக்கிறார். அந்த அறிவிப்புகளில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு 1 இலட்சத்து 72 ஆயிரத்து 196 கோடி ரூபாய் தேவை. அது குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றினை பேரவையில் வைக்க வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை வைத்தும்கூட, அந்தக் கோரிக்கையை ஜெயலலிதா நிராகரித்து விட்டார்.
ஜெயலலிதா அதிகாரத்தில் இருக்கும் வரை, ஜெயலலிதாவையும் "டாஸ்மாக்" நிறுவனத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது" என்றெல்லாம் ஜெயலலிதாவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் "ஸ்டேட்ஸ்மென்" இதழில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.
எனவே ஜெயலலிதாவின் வாக்குறுதிகள் எந்தக் கதியிலே இருக்கின்றன என்று தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுவதற்கும் நன்றாகத் தெரிந்திருக்கின்றது. அதை மறைக்கின்ற முயற்சியில் ஜெயலலிதா ஈடுபடுவது தேவையற்றது. அது இருட்டறையில் கருப்புப் பூனையைத் தேட முயற்சிப்பது போன்றதாகும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.