எனது தொண்டை மறுத்தாலும் தொண்டாற்றுவதை நிறுத்த மாட்டேன் - கருணாநிதி உருக்கம் !
திருவாரூர்: உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் தொண்டாற்றுவதை நிறுத்த மாட்டேன் என திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் 2ஆவது முறையாகப் போட்டியிட்டு 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தனது 93ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இன்று காலை திருவாரூர் வருகை தந்தார்.
பின்னர் மாலையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செய்வேன்.
இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம். 1964-ஆம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளைச் சந்தித்து வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ளது தோல்வி அல்ல. அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.
மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு சதவீதம் தவறு இழைத்துவிட்டார்கள். எனினும் அடுத்து வரும் வெற்றிக்கு இந்த விழா அச்சாரமாக அமைந்துள்ளது. தேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் நமக்கு கிடைத்தது தோல்வி அல்ல, வெற்றிதான். வெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான் வெற்றியை அடைய முடியும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.