என்னை பதவி விலகுமாறு உத்தரவிட்ட பாஜக மேலிடம்
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், அதன் மூலம் என்னை அரசுத் தரப்பு தனி வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலக்கி விடலாம் என்ற நம்பிக்கையோடு, நான் தலைவராக இருந்த பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளையில் முறைகேடுகள் நடந்ததாகச் சொல்லி, அவற்றின்மீது சி.பி.ஐ. விசாரணை கோரி இரண்டு "ரிட்" மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு "ரிட்" மனுக் களையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. "ரிட்" மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது, அவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.
உயர் நீதிமன்றத்திலிருந்தோ அல்லது ஆளுநரிட மிருந்தோ அவர்கள் விரும்பியதை அடைவதில் தோற்றுப் போனதற்குப் பிறகு, எண்ணியதை முடிக்க அரசியல் ரீதியான அழுத்தம் தரப்பட்டது. நான் இரண்டு பதவிகளை வகித்து வந்ததால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவி யிலிருந்து விலகும்படி என்னைக் கேட்டுக் கொள்ள மாநில அரசுக்கு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
என்மீது தொடர்ந்து இப்படி அழுத்தம் தரப்பட்டு வந்த நிலையில், நான் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி விடுவதென்று தீர்மானித்து, 8-2-2012 அன்று ராஜினாமா செய்தேன். நான் ராஜினாமா செய்த அன்றே, மாநில அரசு அதனை ஏற்றுக் கொண்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து என்னைத் தூக்கியெறிய மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வி கண்டதற்குப் பிறகு, அந்த ஆதிக்க சக்தியினர் என்னை அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விரட்டுவதற்கு தனியார் மகஜர் மூலம் என்மீது புகார் கொடுப்பதென்று முடிவு எடுத்ததாகத் தோன்றுகிறது.
ஆதிக்க சக்தியின் குழுவைச் சேர்ந்த ஒருவர், நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பை உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், எனக்கு எதிராகப் புகார் தாக்கல் செய்யப்பட்டு, அதன்மீது தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று என்னிடம் தெரிவித்தார்.
எனக்கு எதிராகப் புலன் விசாரணை நடத்துவதற்கான நீதிமன்ற ஆணை மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு;சட்டத்துறையில் 56 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழுக்கற்ற பணி புரிந்து கொண்டிருப்பவன் என்ற எனது புகழுக்குக்களங்கம் ஏற்பட்டு விடுமோ என்று எனக்குத் தோன்றியது. அந்த ஆதிக்க சக்தியினர் பிரயோகிக்கும் கடைசி ஆயுதம் இதுவாகத்தான் இருக்கும் என்று எனக்குப்பட்டது. எனவே, நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகி விடுவதென்றும்; என்மீது கொடுக்கப்பட்ட புகாரிலிருந்து நான் நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பு விலகுவதில்லை என்றும் முடிவெடுத்தேன்.
அனைத்துத் தரப்பினரிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டதற்குப் பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம், தனியார் கொடுத்த புகார் மனுவைத் தள்ளுபடி செய்தும், எனக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை ரத்து செய்தும் ஆணையிட்டது.
புலன் விசாரணையை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற குற்றம் நிகழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் புகாரில் இல்லை என்றும்; இதுபோன்ற புகாரை ஏற்று விசாரிப்பதற்கு தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து கொண்டிருந்தபோது, நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
பல்வேறு உத்திகளைக் கடைப்பிடித்ததற்குப் பிறகும் அந்த ஆதிக்க சக்தியினர் எதைச் சாதிக்க முடியாமல் போனதோ, அதை நான் ராஜினாமா செய்திருந்தால் சாதித்திருப்பார்கள்; அவர்களு டைய ஆசையும் நிறைவேறியிருக்கும். எனினும், எனக்கு எதிரான புகாரிலிருந்து நான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் வரை நான் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. புகார் மனுவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்குப் பிறகு, 13-8-2012 அன்று நான் என்னுடைய ராஜினாமா கடிதத்தை அரசிடம் ஒப்படைத்தேன்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்னுடைய முடிவை நான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். ஆனால், அப்போது நானிருந்த மனநிலையில், எக்காரணம் கொண்டும் என்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவதில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
இறுதியாக 17-1-2013 அன்று என்னுடைய ராஜினாமா மாநில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் எனக்கு இருந்த தொடர்பு முடிவுக்கு வந்தது. என்னுடைய சட்டத்துறை வாழ்க்கையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாமல் போனது இந்த ஒரே ஒரு நிகழ்வில் மட்டும்தான்.