எப்படியெல்லாம் வாய்தா வாங்கலாம்.. புக்கே போடலாம்!
இந்த வழக்கில் நான் சந்தித்த பல்வேறு தடைகளை விளக்கிப் பட்டியலிட்டிருக்கிறேன். வாய்தாக்களை எப்படி வெற்றிகரமாகப் பெற முடியும் என்பதற்குத் தேவையான பல்வேறு வகைப்பட்ட புதுமையான அடிப்படைகளை, இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நான் ஆஜரானதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். "ஒத்திவைத்தல் அல்லது வாய்தாச் சட்டம்"என்ற பொருளை மையமாக வைத்து ஒரு நூலையே என்னால் எழுத முடியும். எனினும், குற்றவாளி யாராவது விசாரணையைத் தொடர்ந்து இழுத்தடிக்கும் நோக்கில் என்னுடைய நூலைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதால் அவ்வாறு நூல் எழுத நான் விரும்பவில்லை.
உடன்பிறப்பே, இவ்வாறு திரு.பி.வி.ஆச்சார்யா, ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நேர்மையாகவும், கடமை உணர்வோடும் பணி புரிந்ததற்காகவும், ஜெயலலிதா தரப்பினரின் சட்டத்திற்குப் புறம்பான கோரிக்கைகளுக்கெல்லாம் வளைந்து கொடுக்காததாலும், அவருக்குக் கிடைத்த பரிசு ‘மன உளைச்சல்' மட்டும்தான்.
ஆதிக்கசக்திக் கும்பல் தொடர்ந்து கொடுத்த தொல்லைகளாலும், அரசியல் ரீதியான அழுத்தத்தாலும், அவர் இறுதியில் ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நடந்த வினோத நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.
ஜெயலலிதா தரப்பினர் மீது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது, "இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா" என்று பெங்களூரு தனி நீதிபதி கேள்வி எழுப்பும் அளவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தாக்கள் கோரப்பட்டதை நீதிமன்றத் துறை சந்தித்தது. பல முறை ஏதாவது ஒரு சாக்கில், சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் வழக்கு கொண்டு செல்லப்பட்டு - ஒவ்வொரு முறையும் குற்றஞ்சாட்டப்பட்டோர் நீதிமன்றங்களின் கண்டனங்களுக்குத் தொடர்ந்து ஆளாயினர்.
இறுதிக்கட்டத்திலே கூட, தீர்ப்பு வழங்கப்படும் நிலையில், தீர்ப்பு நாளையும், நீதிமன்ற வளாகத்தையும் மாற்ற வேண்டுமென்றுகோரி, அது ஏற்கப்பட்டதற்குப் பின் உச்சநீதிமன்றம் சென்று, வேறு மாநிலத்திலே தீர்ப்பு வழங்க வேண்டுமென்று கோரி அதுவும் தள்ளுபடி செய்யப்பட்ட விநோதமும் இந்த வழக்கில் நடந்தேறியது.
"குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே, தீர்ப்பு வழங்கி விடுவேன்" என்று தனி நீதிபதி பச்சாப்புரே கடும் எச்சரிக்கைவிடும் அளவுக்கு நிலைமை முற்றியதோடு, "நான் தனியாகக் கடந்த ஆறு மாதங்களாக நீதி மன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதைப்போல உணருகிறேன்" என்று அவர் தன்னுடைய மன வேதனையை வெளியிடும் அளவுக்கு நிகழ்வுகள் உருவாக்கப்பட்டன.
இப்படி தனி நீதிமன்ற நீதிபதிகளையும், பி.வி.ஆச்சார்யா போன்றவர்களையும் மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கியவர்கள்தான், இன்றைக்கு உத்தமர்கள் போல வேடமணிந்து கொண்டு உலகத்தை ஏமாற்ற எத்தனிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் வெகுளிகள் தமிழ் மக்கள் என்ற எண்ணத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?"