கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அதிமுக எம்எல்ஏ... சட்டசபையை விட்டு வெளியேறிய திமுகவினர்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டு சொன்னதால் தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டசபையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
அதிமுக எம்எல்ஏ நரசிம்மன், சட்டசபையில் இன்று பேசுகையில், திமுக தலைவரை பெயர் குறிப்பிட்டு பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், நரசிம்மன் பேசியதை நீக்க சபாநாயகர் மறுத்துவிட்டார்.
சபாநாயகரின் முடிவை கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
கோபப்படுத்த முயற்சி
சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்ளிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், எங்களை கோபமடைய செய்ய வேண்டும். வம்புக்கு இழுக்க வேண்டும் என்ற நிலையில் அதிமுக உறுப்பினர் நரசிம்மன், திமுக தலைவர் கலைஞரின் பெயரை சொல்லி பேசினார். திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தோம்.
தோல்வியடையாத தலைவர்
5 முறை முதல் அமைச்சராக இருந்தவர் கலைஞர். 13வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவர் சந்தித்த தேர்தல்களில் தோல்வியடைவில்லை.
பெயரை சொல்லலாமா?
93 வயதை அடைந்திருக்கக் கூடிய மூத்த தலைவரை பெயரை சொல்லியபோது, எங்களுடைய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்ல, நானும், எங்களுடைய துணைத் தலைவரும் (துரைமுருகன்) எழுந்து சபாநாயகரிடத்திலே ஒரு விளக்கத்தை கேட்டோம்.
நாங்களும் பெயரை கூறுவோம்
முன்னாள் முதல் அமைச்சர் கலைஞருடைய பெயரை சொல்லும்போது, அது தவறு இல்லை என்று அவர் எங்களுக்கு விளக்கம் தந்தார். உடனே நாங்கள், இப்போது முதலமைச்சராக இருக்கக் கூடிய அம்மையார் ஜெயலலிதாவினுடைய பெயரைச் சொல்லி நாங்கள் பேசலாமா, பேசுவதற்கு நீங்கள் அனுமதி தருவீர்களா என்று கேட்டோம். அதெல்லாம் முடியாது. முதலமைச்சர் பெயரை சொல்லக் கூடாது. இது சபாநாயகரோட உத்தரவு என்றார்.
வெளிநடப்பு
நான் கேட்க விரும்புவது, ஒரு உறுப்பினருடைய பெயரைச் சொல்வது, சட்டமன்ற எந்த விதிமுறையிலும் குறிப்பிடப்படவில்லை. இப்படியிருக்கும்போது முதலமைச்சர் ஜெயலலிதா பெயரை சொல்லக் கூடாது என்று சபாநாயகர் தீர்ப்பளிக்கிறார் என்றால், அது அவை மரபுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக நிச்சயம் இருக்கும்.
காங்கிரஸ் உறுப்பினர்கள்
சபாநாயகரை கண்டிக்கும் வகையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். ஸ்டாலின் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து காங்கிரஸ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
சொன்னாங்களே?
தமிழக சட்டசபையில் இனி எதுவாக இருந்தாலும் வெளிநடப்பு செய்ய மாட்டோம் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.