தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை... மதச்சார்பற்ற குடியரசை கேவலப்படுத்துவதா? கருணாநிதி காட்டம்
சென்னை: மதச்சார்பற்ற குடியரசு என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை கேவலப்படுத்தும் வகையில் தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை செய்யப்படுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:
கேள்வி :- தபால் அலுவலகங்களில் புனித "கங்கை நீர்" விற்பனை அமோகமாக நடை பெறுகிறதாமே?
பதில்: பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால், இதே தபால் அலுவலகங்களில் திருநீறு, குங்குமம் ஆகியவையும் விற்பனைக்கு வந்து விடும். பக்தர்கள் கவலைப்படத் தேவையில்லை.
"மதச் சார்பற்ற குடியரசு" என இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது, இந்த அளவுக்குக் கேவலப்படுத்தப்பட்டு வருவதை, யாராலும் கற்பனை செய்தும் பார்த்திட இயலாது.
கேள்வி :- தமிழ்நாட்டில் எம்.சி.எச்., டி.எம். போன்ற தனி சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்தியாவுக்கும் தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?
பதில்: உண்மைதான்! இதுபற்றி தமிழர் தலைவர், கி. வீரமணி அவர்கள் விரிவாக அறிக்கை கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில், மருத்துவத் துறையில், மருத்துவப் படிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளுக்கு, தமிழ்நாடு அளவில், நுழைவுத் தேர்வு நடத்தித் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எம்.சி.எச்., டி.எம். போன்ற சிறப்பு மருத்துவத்தில் முறையே 108 இடங்களும், 81 இடங்களும் உள்ளன. அதற்கு தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
மாநிலத் தொகுப்பிலிருந்து எம்.பி.,பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு எடுத்துச் சென்று மாநிலங்களின் தலையில் கை வைத்துச் சுரண்டி வருவதைக் கண்டித்து, அதற்காக நுழைவுத் தேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துவதையே திரும்பப் பெற வேண்டுமென்று தமிழகமே கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவுகளுக்கான தேர்வுகளில் தமிழகத்திற்கென இதுவரை இருந்த இடங்களை தற்போது அகில இந்தியாவுக்கும் தாரை வார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது, தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இந்தப் பிரச்சினையை தமிழக அரசுதான் மத்திய அரசின் ஆழ்ந்த கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்க்க வேண்டும். எப்போதும் போல முதல் அமைச்சர் இதற்கும் ஒரு கடிதத்தை எழுதி விட்டு, காரியம் முடிந்ததாகக் கற்பனை செய்து கொண்டு இருப்பாரானால் உருப்படியான விளைவு எதுவும் ஏற்படாது; தமிழக மாணவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு உபத்திரவம்தான் ஏற்படும்.
கேள்வி : காவல் துறையின் அடுத்தடுத்த தோல்விகளுக்குக் காரணம், துறையிலே உள்ள காலிப் பணி இடங்கள்தான் என்ற கூற்று சரியா?
பதில்: இந்தக் கேள்விக்கு, இந்த இதழ் "ஆனந்த விகடன்" தனது தலையங்கத்திலே பதில் கூறியிருக்கிறது. அது, "கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள் என நாள் தவறாமல் நடக்கின்றன குற்றங்கள். காவல் துறையின் கண்காணிப்பு எல்லைக்குள் வராத, தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழும் குற்றங்களை விட்டு விடுவோம். ஆனால், கூலிப்படையினரால் நிகழ்த்தப்படும் குற்றங்களை, பட்டப் பகலில் நிகழும் வழிப்பறிகளை, கொள்ளைகளை, சங்கிலி அறுப்புகளைத் தடுக்கவோ, கட்டுக்குள் கொண்டுவரவோ காவல் துறையால் ஏன் முடியவில்லை? இது போன்ற குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். முதல் சவால் நிரப்பப்படாமல், கூட்டப்படாமல் உள்ள காவல் பணியாளர் இடங்கள். மக்கள் பெருக்கம் கூடக்கூட, காவல்நிலையங்கள், காவலர்கள் எண்ணிக்கையில் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சென்னையின் சட்டம் - ஒழுங்கையே சுமார் 20 ஆயிரம் காவலர்கள்தான் நிர்வகிக்கிறார்கள் என்பதன் மூலம், காவலர்களின் பற்றாக்குறையை உணர முடியும்.
தமிழகத்தில் 1 இலட்சத்து 22 ஆயிரம் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், அதில் 19 ஆயிரத்து 200 பணியிடங்கள் இப்போதுமே காலியாக உள்ளன.
கூடுதல் பணி இடங்களைத் தோற்றுவிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இருக்கும் காலி இடங்களையாவது உடனடியாக நிரப்ப அரசு முன்வர வேண்டும்" என்று "ஆனந்த விகடன்" தன் தலையங்கத்தில் எழுதியிருப்பது அலட்சியப் படுத்தக்கூடிய கருத்து அல்ல. அ.தி.மு.க. அரசு இனியாவது இதில் கவனம் செலுத்துமா?