அதிருப்தியாளர் கூட்டம் அதிகரிப்பு - 5 புதிய அணிகளைத் தொடங்க கருணாநிதி திட்டம்
சென்னை: அதிருப்தியாளர்களை சமாளிக்க திமுகவில், புதிதாக ஐந்து துணை அமைப்புகளை துவக்க அக்கட்சியின் தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம், 65 மாவட்ட செயலாளர்களில் 60 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மீதமுள்ள 5 மாவட்டங்களுக்கான செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவும் இல்லை. நியமனம் செய்யப்படவும் இல்லை. அதாவது உட்கட்சி பூசலால் சேலத்தில் 3 மாவட்டங்கள் ஈரோட்டில் 2 மாவட்டங்களுக்கான தேர்தலை நடத்தவும் முடியாமல், மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் முடியாமல் தி.மு.க. தலைமை தடுமாறி வருகிறது.
தற்போது உட்கட்சித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில், பெரும்பாலானவர்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள். இதனால், அதனால், ஸ்டாலின் அணிக்கு எதிரானவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாக கட்சி மேலிடத்திற்கு தகவல் சென்றுள்ளதாம்.
அதோடு, இந்த அதிருப்தியாளர்களைத் தன் வசம் இழுக்க முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான அழகிரி முற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சிலர், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முயற்சியாக பாஜகவுக்கு தாவ முடிவு செய்திருக்கிறார்களாம்.
ஏற்கனவே, உட்கட்சிப் பூசல்களால் திமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், கைவசம் உள்ள ஆதரவாளர்களையும் இழக்க திமுக விரும்பவில்லை. எனவே, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தி, அவர்களை கட்சியிலேயே நீடிக்க வைக்க, கருணாநிதி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த லோக்சபா தேர்தலில், இணையதள பிரசாரம் பாஜக வெற்றிக்கு பெரிய அளவில் கை கொடுத்ததால், திமுகவிலும் இணையதள அணி ஒன்றை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அந்த அணியினர் மூலம் இணையதள பிரசாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல், பெண்களின் ஓட்டுகளை கவர சுயஉதவிக் குழு அணி, தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளைக் கவர வர்த்தக அணி, தொழிலாளர்களை கவர அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி மற்றும் ஓட்டுனர்கள் அணி போன்றவற்றையும் உருவாக்கவும் திமுக தீர்மானித்துள்ளதாம்.
இந்த அணிகளுக்கு பொறுப்பாளர்களாக, கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்களை நியமிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.