சட்டமன்றத்தில் ஜெ. திட்டமிட்டு நடத்திய 'அந்த' சம்பவம்: திருநாவுக்கரசர் சொன்னது இது- கருணாநிதி
சென்னை: தமிழக மக்களிடையே ஜெயலலிதாவுக்கு பெரும் அனுதாபம் தேடித்தந்த ஒரு சமம்பவம் குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி ஒரு நினைவூட்டல் அறிக்கை எழுதியுள்ளார்.
அதன் விவரம்:
பன்னீர்செல்வம் அவர்களே, தீய எண்ணத்தோடு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்தச் சம்பவமாவது உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? திருநாவுக்கரசர் அவர்களும் அ.தி.மு.க.விலே உண்மையாக உழைத்து வெளியே வந்து இந்த நாட்டிற்கு உண்மை தெரியாமல் போய் விடக் கூடாது என்பதற்காக இதனை வெளியிட்டார்.
சட்டமன்றத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து நான் கூறுவதைவிட, அன்றைக்கு எதிர்க் கட்சித் துணைத் தலைவராக அ.தி.மு.க.விலே ஜெயலலிதாவிற்கு ஆதரவாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள் அந்தச் சம்பவம் நடைபெற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அதே சட்டப்பேரவையில் பேசியதை அப்படியே குறிப்பிடுகிறேன். இதோ நண்பர் திருநாவுக்கரசு பேசுகிறார்..
"இதே சட்டமன்றத்தில் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் பட்ஜெட்டைப் படித்தபோது சட்டமன்றத்திலே ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது அனைவருக்கும் தெரியும். இப்போது நான் சொல்வது; என்னுடைய தாய் மீது ஆணையாக நான் தெய்வமாக வணங்குகிற எம்.ஜி.ஆர். அவர்கள் மீது சத்தியமாகச் சொல்வதாகும்.
முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்தபோது எதிர்க் கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவரது வீட்டில் உட்கார வைத்துக்கொண்டு என்னைப் பார்த்து "நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் பட்ஜெட் படிக்கும் போது நான் பிடித்து இழுத்தால் நன்றாக இருக்காது. எனவே என் பக்கத்திலே இருக்கிற நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியின் கையிலே இருக்கிற பட்ஜெட் காப்பியை பிடித்திழுத்து அடிக்க வேண்டும்"" என்று சொன்னார்.