''சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது''
செல்வி ஜெயலலிதா மாடியிலிருந்து இறங்கி வந்தார். வந்தவுடனே, அங்கே இருந்தவர்களைப் பார்த்து, "புறப்படலாம், நேரம் ஆச்சு" என்றார். மூத்த தலைவர்கள் யாருக்கும் அவர் வந்த வேகத்திலே தடுத்துச் சொல்ல துணிச்சல் இல்லை. அவரை அழைத்துச் சென்று சட்டமன்ற அவையிலே உட்கார வைத்துவிட்டு, "தோழமைக் கட்சி, காங்கிரஸ் கட்சி யிடத்திலே இதுபற்றி கேட்டீர்களா?"" என்றேன்.
அவர், "எல்லோரையும் கலந்துதான் சொல்லுகிறேன். இன்றைக்குச் சட்டமன்றத்திலே வன்முறை நடந்தால் இன்றைக்கு மாலையே ஆட்சி கலைக்கப்படுகிறது என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது"" என்று சொன்னார்.
நான் உடனே தோழமைக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அறைக்குச் சென்று "இன்றைக்கு நாங்கள் எல்லாம் வெளிநடப்பு செய்வதாக இருக்கிறோம். நீங்களும் எங்களோடு ஒத்துழைப்புத் தர வேண்டும்"" என்றும், அத்துடன், "இன்றைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்களும் உள்ளேயிருந்து ஏதாவது உதவி செய்வீர்களா?"" என்றும் மறைமுகமாகக் கேட்டேன்.
நேரிடையாகச் சொல்லாமல், அவர் "நான் புறப்படுவதற்கு முன்னாலேயே பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியிடம் 8.30 மணிக்கு பேசிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு காவல்துறையின் மீது ஒரு கண்டன அறிக்கையைப் படித்துவிட்டு எங்களுடைய காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்யப் போகிறது. இதுதான் எங்களுக்கு டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவு"" என்று சொன்னார்.
செல்வி ஜெயலலிதா அவையில் உட்கார்ந்திருந்தார். நான் வேகமாக வந்து, "திரு. மூப்பனார் அவர்களிடத்திலே கேட்டேன். அவர்கள் எந்தவிதமான அசம்பாவிதமும் இங்கே நிகழ்த்து வதற்குத் தயாராக இல்லை. காங்கிரஸ்காரர்கள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்"" என்று சொன்னேன் "மூப்பனார் எப்போதும் இப்படித்தான். எனக்கு விரோதமாகத்தான் அவர் சொல்லுவார். எனக்கு வேறு மாதிரித் தகவல் வந்திருக்கிறது"" என்று கூறியதுடன் "நீங்கள் போய் ஏன் அவரிடத்தில் கன்சல்ட் செய்தீர்கள்?" என்றார்.