பன்னீர்செல்வம் தம்பியைப் பற்றிய நிகழ்வுகளைச் சொன்னால் ஊரே சிரிக்குமே?
பன்னீர்செல்வம் தேடித் தேடிப் பிடித்து, 25-3-1989 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருந்த நான் 13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய திட்டங்களையெல்லாம் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்ல முற்பட்டபோது, தி.மு.க. ஏதோ அராஜகத்தில் ஈடுபட்டதாக ஒரு கற்பனைக் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்தக் கதையை ஒரு நாடகமாகவே அரங்கேற்றிய நிகழ்ச்சியெல்லாம் எப்போதோ வெட்ட வெளிச்சமாகி நாட்டு மக்கள் வேதனையை வெளியிட்டதைப் பன்னீர்செல்வம் மறந்துவிட்டாரா? அவரே அந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதி விட்டதால், அன்றையதினம் என்ன நடந்தது என்பது பேரவையிலேயே பேசப்பட்டு, அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்று, பின்னர் அதனை அவைக்குறிப்பிலேயிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எல்லாம் நடைபெற்றன.
நான் இந்தப் பழைய உண்மைச் சம்பவங்களை வெளியிட்டால், நானும், தம்பி ஸ்டாலினும் தரம் தாழ்ந்து அறிக்கை விடுவதாகச் சொல்வதா முதலமைச்சருக்கு உள்ள அழகு? சட்டசபையைக் கூட்டுங்கள் என்றால், அது தரம் தாழ்ந்த செயலா? இந்த ஆட்சியிலே அப்படித்தானா? சட்டசபையைக் கூட்டும்படி நாங்கள் மட்டுமா கூறினோம்? மற்ற எதிர்க்கட்சிகள் எல்லாம் கூடத்தான் பேரவையைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார்கள்? எதற்கெடுத்தாலும் தந்தை, தனயன் என்று பேசுவதா? ஏன், உங்களுடைய தம்பியைப் பற்றிய நிகழ்வுகளைச் சொன்னால் ஊரே சிரிக்குமே? கடந்த தீபாவளியின் போது பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் எல்லாம் யாரை வந்து சந்தித்தார்கள்? என்ன நடந்தது? வாரப் பத்திரிகையிலே அதைப் பற்றிய கட்டுரை வெளி வந்து எங்கும் நாற்றமெடுத்து எத்தனை நாளாயிற்று? அதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லை, வகையில்லை. எனக்கா சவால் விடுகிறீர்கள்?
உங்களுக்குத் தெரியுமா? ஓமந்தூரார் மாளிகையிலே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட போது, நான் அன்றாடம் அங்கே சென்று பணிகளைப் பார்வையிட்டு வந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அமருவதற்கு, முதலமைச்சர் அமருவதற்கு எவ்வாறு இடவசதி செய்யப்படுகிறதோ, அதுபோலவே அமைக்கப்பட வேண்டு மென்று கூறியவன் நான்! அது மாத்திரமல்ல; எதிர்க் கட்சித் தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த அறையினை நானே சென்று பார்த்து, அது அளவிலே சற்றுச் சிறிதாக இருந்தது என்பதால், அதனை மேலும் பெரிதாக்கிக் கொடுக்க வேண்டுமென்று கூறியவன் நான். தரத்தைப் பற்றி என்னிடமா பேசுகிறீர்கள்?
இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.