தமிழக மீனவர் பிரச்சினைக்கு விடிவுகாலம் வராதா? : திமுக தலைவர் கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழக மீனவர் பிரச்சினைக்கு விடிவுகாலம் வராதா? : என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை:
கேள்வி: இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களைச் சிறை பிடித்துச் சென்றிருக்கிறதே?
பதில்: ஆமாம், இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 28ஆம் தேதியன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே நான்கு படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள்.
சில படகுகளிலே இருந்த மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்திருக்கிறார்கள். முனியராஜ் என்பவருக் குச் சொந்தமான படகில் சென்ற நான்கு பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றிருக் கிறார்கள். அவர்களுடைய படகும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் சுடலைமணி, அந்தோணி, ராமச்சந்திரன், முனியசாமி ஆகியோர் சென்று, மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, பாறையில் சிக்கி படகின் அடிப்பகுதி சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது.
படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் குதித்து நீந்திச் சென்று கச்சத் தீவு பகுதியிலே கரையேறிய போது, அங்கே ஏற்கனவே முகாமிட்டிருந்த இலங்கை கடற்படையினர் நான்கு மீனவர்களையும் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்து அழைத்துச் சென்றிருக் கிறார்கள். இதைப் போலவே, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதா பட்டிணத்தைச் சேர்ந்த ராமையன் என்பவரது படகில் சென்ற கலை, பிரசாந்த், பிரகாஷ், ஸ்டீபன் ஆகியோரை யும், இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்களது படகையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட 12 பேரும் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள் ளார்கள். ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் யாழ்ப் பாணம், அனுராதபுரம் சிறைகளிலே வாடிக் கொண் டிருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படை வசம் உள்ளன. இந்த நிலையில் தற்போது 12 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் சங்கக் கூட்டத்தில், இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், அனைத்து அரசியல் கட்சியினர் ஆதரவோடு டெல்லியில் நாடாளுமன்றத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவதென்றும் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
தமிழக மீனவர்கள் இவ்வாறு தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச்சென்று சிறையிலே அடைக்கப்படுவதும், அந்தச் செய்தி வந்த மறுநாளே, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதும் தொடர்கதையாகவே நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நின்றபாடில்லை. இருநாட்டு மீனவர்களின் சந்திப்பும் இரண்டு மூன்று முறை நடைபெற்றும் எவ்வித பயனையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் தல்பீர்சிங் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றிருப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு உடனடியாக அவருடன் தொடர்பு கொண்டு, இந்திய மீனவர்களின் தொடர்ந்து வரும் இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வண்ணம் உடனடியாக சிங்கள அரசுடன் பேசி, உரிய முடிவினை எடுத்திட வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.