வாய்ப்பந்தலில் போடப்பட்ட வெற்று பட்ஜெட்: கருணாநிதி
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மக்களுக்கு பயனில்லா வெற்று பட்ஜெட் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் நெல், கரும்பு கொள்முதல் விலை உயர்வு குறித்து எந்தவித அறிப்பும் இல்லை. அதேபோல் உடன்குடி மின் திட்டத்தை தொடர்ந்து நடத்தவது குறித்தும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் கூறப்படவில்லை. மொத்தத்தில் மக்கள் பயன்படும் வகையில் எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு, காவிரியில் அணை கட்ட முயன்று கொண்டிருக்கின்ற போது, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது பற்றி எந்த தகவலும் இல்லை.
எங்கும் எதிலும் ஊழல்
உச்ச நீதி மன்றத் தீர்ப்பையொட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது பற்றியோ; அவர்கள் தொடர்ந்து போராடி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றியோ; மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் உடன்குடி மின் திட்டத்தைத் தொடங்கி நடத்துவது பற்றியோ; நெடுஞ்சாலைப் பராமரிப்பை தனியார் மயப்படுத்துவதால் நெடுஞ்சாலைப் பணியாளர்களுக்கு ஏற்படும் வேலை இழப்பு பற்றியோ; சுங்கச் சாவடிக்குப் பாக்கி வைத்த அரசு போக்குவரத்துத்துறைக்கு உயர் நீதி மன்றமே கண்டனம் தெரிவித்ததே, அதற்கு என்ன நிவாரணம்என்பது பற்றியோ; கல்வித் துறையில் ஊழல் தற்போது நிலவுவதைப் போல எந்தக் காலத்திலும் இருந்ததில்லை, அதுவும் மாணவர்களின் தேர்வுக் காலம் என்றால் கேட்கவே வேண்டியதில்லை.
வாய்ப்பந்தல் போட்டு
பள்ளிக் கல்வித்துறை சீர்திருத்தம் பற்றியோ; மின்துறை பற்றி கூறவே தேவையில்லை. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நான்காண்டு காலமாக மின்பற்றாக் குறை தீரும், தீருமென்று அரசுதரப்பினர் வாய்ப் பந்தலிலேயே காலத்தைக் கழித்து வருகிறீர்களே, மின் பற்றாக்குறை எப்போது தீரும் என்பது பற்றியோ; 3000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யப்படும் என்று அறிவித்து விட்டு, மூன்றாண்டுகளுக்குப் பிறகு 115 மெகாவாட் சூரிய மின் சக்தித் திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி நிலை அறிக்கையில் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்களே, மீதம் எப்போது என்பது பற்றி குறிப்பிடவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு
சென்னையிலும் மற்றும் மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு வருமென்று செய்தி வருகிறதே, அது பற்றியோ; புதிய தொழில்கள் தொடங்க போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக எத்தனை தொழில்கள் தமிழகத்திலே தொடங்கப்பட்டுள்ளன என்பது பற்றியோ; கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மின் வெட்டு காரணமாக மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான வசதிகள் செய்து கொடுப்பது பற்றியோ; இந்த நிதி நிலை அறிக்கையில் எதுவுமே இல்லை. ஆனால் திரும்பத் திரும்ப ஒரு வார்த்தை மட்டும் இடம் பெற்றுள்ளது.
ஏமாற்று வித்தை
தமிழகத்தின் விடிவெள்ளி - ஏழைகளின் ஏந்தல் - தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைவி - எழுச்சி மிகு தலைவி என்ற இந்த வார்த்தைகள் தான் இந்த நிதி நிலை அறிக்கையிலே திரும்பத் திரும்ப இடம் பெற்றுள்ளதே தவிர, நாட்டு மக்களுக்குப் பயன்படும் எந்தவிதமான அறிவிப்பும் இதிலே இடம் பெறவில்லை. மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை - "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன் - அதில் இரண்டு குளம் பாழ் - ஒன்றில் தண்ணீரே இல்லை" - என்ற வாய் ஜாலத்திலே உள்ள ஏமாற்று வித்தையைப் போலத் தான் உள்ளது.