மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு முறையாக செலவிடவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது. ஆனால், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு முறையாகச் செலவிடவில்லை என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அதிமுக அரசு குறை கூறி வருகிறது.இப்படிக் குறை நேரத்தில் கூறும் நேரத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்காக ஒதுக்கும் நிதியையாவது முறையாகச் செலவிட முன் வரவேண்டாமா நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல தலைமைப் பொது மேலாளர் ஐ.ஜி.ரெட்டி, தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கி உள்ளன என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.இதே குற்றச்சாட்டினை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடர்பாக நானே (கருணாநிதி) பல முறை குறிப்பிட்டுள்ளேன்.ரூ.1885 கோடி மதிப்பிலான துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை ரூ.900 கோடி வரை செலவு செய்த பிறகு, ஓராண்டாகக் கிடப்பில் போட்டுள்ளனர்.இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம் ரூ.900 கோடி வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளது.அந்த இழப்பீட்டுத் தொகையை யார் கணக்கில் சேர்ப்பது முதல்வர் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றால், மக்கள் வரிப்பணி அல்லவா வீணாகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக அரசிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சரும், அந்தத் துறையின் உயர் அதிகாரியும் வெளிப்படையாக தமிழக அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.அதற்கு முதல்வரோ, அந்த துறையின் அமைச்சரோ பொறுப்புணர்வோடு பதில் சொல்லியிருக்க வேண்டாமா
யாரும் பதில் அளிக்காததில் இருந்து அது உண்மை என்றாகி விடுகிறது.மாநில அரசுக்குத் தேவையான நிதியைக் கேட்பது உரிமை. ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவழிக்க வேண்டியது கடமை. உரிமையைக் கேட்கும் நேரத்தில் கடமையை மறந்துவிடலாமா' என இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.