நீதிபதி குமாரசாமி தீர்ப்பைப் போலத்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றியும்... கருணாநிதி
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையை தவறாகக் குறிப்பிட்டு தீர்ப்பளித்ததைப் போலத்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, ஆர்.கே. நகர் தொகுதியில் மிகுந்த நேர்மையுடனும் (?), தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான மேற்பார்வையுடனும் (?), எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்களுக்கிடையே (?), எந்தவிதமான அமைச்சர்களின் ஆர்ப்பாட்டமுமின்றி (?), எதிர்க் கட்சிகளின் அடுக்கடுக்கா கேள்விகளுக்கெல்லாம் முறையாக ஜெயலலிதா பதிலளித்து (?) தேர்தல் ஆணையம் - காவல் துறை - அ.தி.மு.க. எனும் முத்தரப்புக் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாராம்.
அவர்களுடைய "நமது எம்.ஜி.ஆர்." நாளேட்டில் இன்று மாத்திரம் 106 பக்கங்கள் விளம்பரங்கள் என்பதைப் பார்த்தாலே, எந்த அளவுக்கு துதிபாடிகள் அங்கே ஏராளமாக இருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே?
தேர்தல் ஆணையம் - காவல் துறை - #admk. எனும் கூட்டணி அமைத்து, ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டாராம். http://t.co/GOt61T5DvU pic.twitter.com/GfiV6yzjI0
— KalaignarKarunanidhi (@kalaignar89) July 1, 2015
இந்தத் தேர்தல் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள நன்றி அறிக்கையில், "இந்த இடைத் தேர்தலை 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டம்" என்று கூறி தனக்குத் தானே ஆறுதலும், பாதுகாப்பும் தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் வெற்றி "முன்னோட்டமா" என்பதற்கு இன்றைய "இந்து" நாளிதழ் - ""BATTLE WON, WAR REMAINS" - "Going by history, it ispremature to call the by-poll win a prelude to Assembly polls - By-election outcomes have characteristically been different from those of General Elections"" - (ஒரு களத்தில் வெற்றி - ஆனால் முழுப் போர் இன்னும் முடியவில்லை; சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலுக்கு இந்த இடைத் தேர்தல் ஒரு முன்னோட்டம் என்று சொல்வது சிறிதும் பொருத்தமில்லாதது.
இடைத் தேர்தல் முடிவுகளும் பொதுத் தேர்தல் முடிவுகளும் அடிப்படையிலேயே வித்தியாசமானவை; எனவே அவற்றை ஒப்பிட முடியாது) என்ற தலைப்பில் விரிவாக ஜெயலலிதாவின் அவசரக் கருத்துக்கு எதிராக ஆணித்தரமாகவும் துணிச்சலாகவும் பதில் கூறியுள்ளது.
எனவே அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அத்தனை அமைச்சர்களையும் அல்லும் பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க் கட்சிகள் எல்லாம் "துஷ்டனைக் கண்டால் தூர விலகு" என்பதற்கொப்ப களத்தில் நிற்காத நிலையில், தேர்தல் கமிஷனின் தோளில் கை போட்டுக் கொண்டு பெற்றது வெற்றி தானா?
நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த இடைத் தேர்தல் வெற்றி! வெறும் காற்றில் வாள் வீசி வீராப்பு பேசி எகிறிக் குதிப்பதைப் போன்றது தான் இந்த வெற்றி.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.