காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டாதது ஏன்?: கருணாநிதி கேள்வி
சென்னை: காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டாதது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில முதல் அமைச்சர், திரு. சித்தராமையா அவர்கள், காவிரி பிரச்சினையையொட்டி, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்த பிறகு, தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீர் கூட தர முடியாது என்றும், தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைச் சந்திக்கத் தயார் என்றும் அறி வித்திருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில், காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடும் விஷயத்தில் கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே சர்ச்சை ஏற்படுவது வழக்கமாகி விட்டது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு, ஆண்டு தோறும் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். இதனை 12 மாதங்களிலும் பகிர்ந்து வழங்க வேண்டுமென்று தீர்ப்பிலே கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ஆகஸ்ட் மாதத்தில் திறந்து விட வேண்டிய 50 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் திறந்து விட வேண்டுமென்று உத்தரவிடக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை வரும் செப்டம்பர் 2ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதி மன்றமும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள செய்தி கிடைத்ததும், கர்நாடக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நேற்று பெங்களூரு விதான்சவுதாவில் தனது தலைமையில் கூட்டி யிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அமைச்சர்கள் டி.வி. சதானந்த கவுடா, ஆனந்த் குமார், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில அமைச்சர்கள், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டப் பேரவை ம.ஜ.த. தலைவர் எச்.டி. குமாரசாமி, நாடாளுமன்ற உறப்பினர்கள் எம். வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஆகியோர் கலந்து கொண்டு, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு பற்றி விவாதித்திருக் கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினையே உச்ச நீதி மன்றத்தில் பதில் மனுவாகத் தாக்கல் செய்வோம் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.