சிப்பெட்டை டெல்லிக்கு மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்து மோடிக்கு கருணாநிதி கடிதம்!
சென்னை: சென்னையில் உள்ள மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
கருணாநிதி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கானா காரணம் ஏற்புடையதாக இல்லை.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதேபோல் சிப்பெட் மையத்தை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக பேச்சுகள் எழுந்தன. அப்போது முதல்வராக இருந்த நான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினேன். பின்னர் சிப்பெட் மாற்றப்படாது என மத்திய அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு உறுதியளித்து கடிதம் அனுப்பியிருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றும் முடிவைத் திரும்பப்பெற வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கடிதத்தில் கூறியுள்ளார்.