பாலாறு தடுப்பணை விவகாரத்தில் கொஞ்சமும் அசையாத தமிழக அரசு- கருணாநிதி காட்டம்
சென்னை: பாலாறு தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசு கொஞ்சமும் அசையாமல் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் அனுமதி இல்லாமல், பாலாற்றில் ஆந்திர மாநில அரசு அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டக் கூடாது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டக் கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு மத்திய அரசின் நீர்வளத் துறையும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் அதை மீறி, சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில், புல்லூர் என்ற இடத்தில் தமிழக எல்லையில் ஐந்து அடி உயர தடுப்பணையை ஆந்திர மாநில அரசு கட்டிய போது, அதனைக் கடுமையாகக் கண்டித்து 2-7-2016 அன்றே நான் விரிவாக ஓர் அறிக்கை விடுத்தேன்.
மீண்டும் 13-7-2016 அன்று நான் விடுத்த மற்றொரு அறிக்கையில், ஆந்திர மாநில அரசு எவ்வாறு அத்து மீறி தடுப்பணைகளைக் கட்டுவதிலும், தமிழர்களின் பராமரிப்பில் இருந்து வந்த கனகநாச்சியம்மன் கோவிலை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதிலும் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விவரித்து, தமிழக முதலமைச்சர் உடனடியாக மத்திய அரசுடனும், ஆந்திர மாநில அரசுடனும் தொடர்பு கொண்டு இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ள முன் வர வேண்டுமென்று தெரிவித்திருந்தேன்.
ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதல்வருக்கு இதைப் பற்றி ஒரு கடிதம் எழுதி விட்டு, உச்ச நீதி மன்றத்திலும் ஒரு வழக்கு தாக்கல் செய்து விட்டு, தன் கடமை அத்துடன் முடிந்து விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்.
25-7-2016 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், பேரவை எதிர்க் கட்சித் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் பாலாற்றில் தடுப்பணை கட்டப்படுவது பற்றிய பிரச்சினையை எழுப்பிப் பேசியிருக்கிறார். அப்போது அவர் பாலாற்றில் அணை கட்டும் ஆந்திர அரசைக் கண்டித்து அவையிலே தீர்மானம் நிறைவேற்ற வேண்டு மென்றும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, விவாதிக்க வேண்டுமென்றும், ஆந்திர மாநில முதலமைச்சரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றும் பேசி யிருக்கிறார். அதற்குப் பிறகும் இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.; சிறிதும் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை.