சிறுவாணியின் குறுக்கே அணை கட்டும் கேரளா- தமிழக அரசு தடுக்க கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:
26-8-2016 அன்று "இந்து" ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தரத் தக்க செய்தி வெளி வந்திருந்தது. "Kerala plans Dam across Siruvani River" ("சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை ஒன்றைக் கட்ட கேரளா திட்டமிடுகிறது") என்ற தலைப்பில் வந்த அந்தச் செய்தியில், "With the Tamil Nadu Government failing to respond to "Several Letters" sent by the Union Ministry of Environment and Forests and the Kerala Government regarding the latter's proposal to build a gravity dam across Siruvani river, the Expert Appraisal Committee (EAC) for River Valley and Hydroelectric Projects has recommended grant of standard Terms of Reference for the Project"
அதாவது "சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது பற்றி மத்திய அரசின் சுற்றுப்புற சூழல் மற்றும் வனத் துறையும், கேரள அரசும் அனுப்பிய பல கடிதங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க தவறிவிட்ட காரணத்தால், நதி நீர்ப் பள்ளத் தாக்கு மற்றும் புனல் மின் திட்டங்களுக்கான மத்திய நிபுணர்கள் குழு இந்தத் திட்டத்தை மேற்கொள்வதற்கான வரைமுறைகளைப் பரிந்துரை செய்திருக்கிறது" என்ற தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் விவசாயிகளையும், பொது மக்களையும் உலுக்கியெடுக்கும் செய்தி வெளி வந்திருக்கின்றது.
இந்தச் செய்தி இன்று மற்ற ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.
ஆனால் பேரவையில் தமிழக முதலமைச்சர் என்ன சொல்கிறார்? தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காக 24 மணி நேரமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்களாம்!
காவேரியாக இருந்தாலும், முல்லைப் பெரியாறாக இருந்தாலும், பரம்பிக் குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணித் திட்டம் என்பன போன்ற திட்டங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு, தங்கள் கடமை முடிந்து விட்டதாக இந்த ஆட்சியினர் எண்ணிக் கண் துஞ்சுகிறார்களே, அப்படி இல்லாமல் மிகுந்த விழிப்போடு தமிழ்நாடு அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே நதி நீர்ப் பங்கீடு குறித்து ஆராய்ந்து தீர்வு காண இரண்டு மாநிலங்களின் மாநாடு 10-5-1969 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
அதில் தமிழக அரசின் சார்பில் முதல் அமைச்சராக இருந்த நானும், நிதி அமைச்சராக இருந்த கே.ஏ. மதியழகன், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா ஆகியோரும் - கேரள அரசின் சார்பில் முதலமைச்சராக இருந்த நம்பூதிரிபாத், பாசனத் துறை அமைச்சராக இருந்த பி.ஆர். குரூப், மின் துறை அமைச்சராக இருந்த எம்.என். கோவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டோம்.
மாநாட்டிற்கு மத்திய பாசன மின் விசைத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் தலைமை வகித்தார். மாநாட்டின் முடிவில் பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம், பவானி திட்டம், பம்பார் படுகை, கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டம், கபினி ஆறு ஆகியவற்றின் தண்ணீரைப் பங்கீடு செய்து கொள்வது பற்றி ஒரு ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் நானும், கேரள அரசின் சார்பில் நம்பூதிரி பாத் அவர்களும், மத்திய அரசின் சார்பில் கே.எல். ராவ் அவர்களும் கையெழுத்திட்டோம்.
அந்த ஒப்பந்தம் பற்றி செய்தியாளர்கள் அப்போது என்னிடம் கேட்டபோது, "ஏறத்தாழ 60 கோடியிலிருந்து 70 கோடி ரூபாய்ச் செலவில் தயாரிக்கப்பட்ட பரம்பிக்குளம் ஆளியாறு திட்டத்தால் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரா நிலம் பாசன வசதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் தொடங்கப்பட்ட வேலைக்கு 50 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக செலவழித்திருந்தும் கூட, தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நிறைவு பெறாததால் ஒரு லட்சம் ஏக்கரா அளவே பயனடைய முடிந்தது. நீராறு பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்தது. இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி மேலும் ஒரு இலட்சம் ஏக்கரா பரம்பிக்குளம் ஆளியாறு பகுதியில் பாசன வசதி பெறும். கோவை நகருக்கு சிறுவாணி மூலம் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்த ஒப்பந்தம் பயன் படுகிறது.
பல ஆண்டுகளாகப் பேசப்பட்ட பிரச்சினைக்கு வெற்றிகரமான முடிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நல்ல எண்ணத்துடன் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் முயற்சியால் தொடங்கப்பட்ட திட்டம் பூரணத்துவம் பெற்றதில் தனி மகிழ்ச்சி அடை கிறேன்" என்று கூறினேன்.
என்னையும், கேரள முதல்வரையும் பாராட்டிய மத்திய அமைச்சர் கே.எல். ராவ் அவர்கள், "மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்ப்பதில் இவர்கள் இந்தியாவுக்கே வழி காட்டுகிறார்கள்" என்று கூறினார். அந்த ஒப்பந்தத்தை திரு. சி. சுப்ரமணியம் அவர்கள் வரவேற்றுப் பாராட்டிய செய்தி "தினமணி" நாளிதழில் 14-5-1969 அன்று வெளியானது. இது அன்றைய செய்தி.