கோவை, ஈரோடு, திருப்ப்பூர் மாஅவட்டங்கள் பாலைவனமாகிவிடும்- கருணாநிதி
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கேரள அரசு வெற்றி பெற்று விடுமானால், கோவை மாவட்ட மக்களுக்கான குடி நீராதாரம் அடை பட்டுப் போய் விடும் என்பதுடன்; பவானி ஆற்றுக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பாசனமும் பாழ்பட்டுப் போய் விடும். காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை எனத் தொடங்கி, பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகள் என்று நீட்சி அடைந்து, தற்போது சிறுவாணியில் கேரள அரசின் அணை என்பது வரை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் நசுக்கி நாசமாக்கப்பட்டு வருகிறது. இவற்றைக் கண்டு வெகுண்டெழுந்து அதிவேகமாகக் காரியமாற்றிட வேண்டிய ஜெயலலிதா அரசோ; எந்தப் பிரச்சினைக்கும் உரிய காலத்தே தீர்வு காண முயற்சி செய்யாமல், எல்லாப் பிரச்சினைகளையும் சுருட்டித் தலையணையாக்கிக் கொண்டு நீடு துயிலில் ஆழ்ந்திருக்கிறது; இந்த இலட்சணத்தில் வக்கணைக்கும், வசைமாரிக்கும் பொய்களையே பேசிப் பொழுது போக்கும் புரட்சிக்கும் மட்டும் குறைச்சலே இல்லை!
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி குறித்து, கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், "கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி வனப் பகுதியில் உள்ள முக்காலி என்ற இடத்தில் 500 மீட்டர் நீளம், 51 அடி உயரத்தில் ரூ. 900 கோடி செலவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஆற்றில் வரும் தண்ணீர் முழுக்க தமிழக நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரக்கூடியது. எனவே இதில் அணை கட்ட கேரள அரசுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கா ததால் தான் இந்தத் திட்டத்தை தற்போது கேரள அரசு கையில் எடுத்து அதை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால் மூன்று மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். எனவே தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தத் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருக்கின்றனர். விவசாயிகள் சங்கத்தினரின் எச்சரிக்கையை ஏற்று ஜெயலலிதா அரசு உடனடியாக என்ன செய்யப் போகிறது? இந்த அணை கட்டும் பிரச்சினையில் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறித் தாமதித்ததற்கு நாட்டு மக்களுக்கு ஜெயலலிதா என்ன விளக்கம் தரப் போகிறார்? நாளை 110வது விதியின் கீழ் சட்டப் பேரவை மூலம் பதில் வருமா?