அதிமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணியை விரும்பும் கருணாநிதி....!
சென்னை: அதிமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி தமிழகத்தில் அமைய வேண்டியது அவசியம் என்பதை திமுக தலைவர் கருணாநிதி நேரடியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக தேமுதிக, திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்பதையும் அவர் பகிரங்கமாகவே கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிகள் குறித்து இப்போதே தமிழக எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைகளையும், முயற்சிகளையும் தொடங்கி விட்டன. ரகசியமாகவும், பகிரங்கமாகவும் பல வேலைகள் நடந்து வருகின்றன.
அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. அந்த வகையில்தான் மேகதாது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் முயற்சியின் பேரில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.
இந்த குழுவில் திமுக, காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என முக்கியக் கட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. திமுக தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், தேமுதிக தலைமையின் கீழ் குழுவில் ஒரு பிரதிநிதியாக இடம் பெற்று கனிமொழியையும், திருச்சி சிவாவையும் அனுப்பி வைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது.
இந்த சந்திப்பானது தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுமா என்பது விவாதத்துக்குரியது. இருப்பினும், தமிழக எதிர்க்கட்சிகளை ஓரணியில் கொண்டு வரும் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பொதுப் பிரச்சினைகளில் இதுபோல ஒருங்கிணைந்து செயல்பட இவர்கள் முடிவு செய்து அது தொடர்ந்தால், வரும் நாட்களில் சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணியாகவும் கூட இது மாறலாம்.. இதைக் குறி வைத்துத்தான் திமுக உள்ளிட்ட கட்சிகள் செயல்படுகின்றன என்பதும் உண்மையே.
இந்த நிலையில் தற்போதைய நிலையில் தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைவது நல்லது எ்ன்று மூத்த தலைவரான கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த நிகழ்வுகள் குறித்து கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜயகாந்த் என்னை சந்தித்ததை வைத்து, கூட்டணிக்கான அச்சாரமா என, கேட்கின்றனர். அது, ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதை பொறுத்தது.
விஜயகாந்த் எடுத்த முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
Read: http://t.co/sleM0l2Opz
— KalaignarKarunanidhi (@kalaignar89) April 27, 2015
எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் இப்போதே, அது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால், இப்போது தமிழகத்தில் உள்ள நிலையில், கூட்டணி தேவை என்பதையும், அந்த கூட்டணியின் வெற்றி ஒன்று தான் எதிர்கால தமிழகத்தைக் காப்பாற்றும்.ஜனநாயகத்தில், தமிழக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியை, விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக, அவரைப் பாராட்டுகிறேன்.
அப்படி பாராட்டுவதற்கு அடையாளமாகத் தான், அவருடைய முயற்சிக்கு, தி.மு.க., எல்லா வகையான ஆதரவையும் தர தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மேலும் திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்காகவும், வலுவான கூட்டணி அமைவதற்காகவும் திமுக மேலும் கூட இறங்கிப் போகலாம், விட்டுக் கொடுத்துச் செயல்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.