பவானி சிங் வழக்கு தீர்ப்பு: நேர்மை, நியாயத்திற்கு கிடைத்த வெற்றி... கருணாநிதி மகிழ்ச்சி
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நியமனம் செல்லாது என்று இன்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கருணாநிதி, ‘இந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதை தி.மு.க,விற்கு கிடைத்த வெற்றி என்று கூறுவதைவிட , நேர்மைக்கும், நியாயத்திற்கும் கிடைத்தவெற்றி என்று கூறலாம்' என்றார்.
அதனைத் தொடர்ந்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தங்களை வந்து சந்தித்தன் மூலம் கூட்டணிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கருதலாமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, 'தமிழ்நாடு தற்போதுள்ள சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும் என்பது எனது கருத்து,' என கருணாநிதி பதில் அளித்தார்.