ஓஎன்ஜிசியால் அழியும் நெல் விவசாயம்.. கதிராமங்கல திட்டத்தைக் கைவிட கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை
ஓஎன்ஜிசியால் டெல்டா பகுதியில் நெல் விவசாயம் அழியும். எனவே, அதனை கைவிட வேண்டும் என அரசுக்கு கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு கடும் கண்டம் தெரிவித்துள்ளார் கருணாஸ் எம்எல்ஏ.
கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய போது போலீசார் கடும் தடியடி நடத்தினார்கள். 10 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.
இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கருணாஸ் கூறியதாவது:
தலைமுறையை அழிக்கும் திட்டம்
கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு கண்டனங்கள். கடந்த ஓராண்டுக்கும் மேலாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் அடுத்த தலைமுறையையும் அழிக்கக் கூடிய திட்டங்கள் வேண்டாம் என்று போராடி வருகின்றனர். நெடுவாசல் மக்கள் நீண்ட நெடிய காலமாக இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
அனுமதிக்கக் கூடாது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட, மக்களுக்கு எதிரான திட்டத்தை அரசு செயல்படுத்தாது என்று அறிவித்தார். அவரது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசு, மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது.
கவன ஈர்ப்பு தீர்மானம்
இந்தியாவில் குறிப்பிட்ட அளவிற்கு டெல்டா பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. அடிப்படை விவசாயத்தை அழிக்கக் கூடியது இந்தத் திட்டம். இது தொடர்பான கவன தீர்ப்புத் தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தோம்.
சட்டசபையில் குரல் கொடுப்போம்
சபாநாயகர் இந்தத் தீர்மானத்திற்கு அனுமதி வழங்கவில்லை. நாளை அனுமதிக்கப்படும் என்று சபாநாயகர் கூறியிருக்கிறார். எனவே, நாளை சட்டசபையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்களுக்கு எதிரான இந்தத் திட்டத்தை எதிர்த்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம் என்று கருணாஸ் கூறியுள்ளார்.