ஜெயலலிதாவின் உடல் அருகே சிரித்தபடி செல்பி எடுத்த கருணா.. வறுத்தெடுக்கும் வலைவாசிகள்!
சென்னை: எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சாதாரண மக்களுக்குத் தெரிய வேண்டுமோ இல்லையோ... விவிஐபிகள் அல்லது விஐவிக்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் கருணாஸ் மாதிரிதான் மாட்டிக்கொண்டு அசிங்கப்பட வேண்டும்.
நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்குக்கு ஏராளமான விவிஐபிக்கள், நடிகர் நடிகைகள் வந்தனர்.
அவர்களைப் பார்த்த பொதுமக்கள் ஆர்வம் மிகுதியால் நடப்பது என்ன நிகழ்ச்சி, எதற்காக வந்திருக்கிறோம் என்பதையெல்லாம் மறந்து உடன் நின்று படமெடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர். நடிகர், நடிகைகள் அவர்கள் பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தாலும், அவர்களை மறித்து பக்கத்தில் நின்று செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டனர் அங்கு கூடியிருந்தவர்கள். இதில் சில நடிகைகள் பாடு படு மோசம். பாவம், கீழை விழுந்து எழுந்து உயிரைக் காத்துக் கொள்ள ஓடினர். அப்படியும் கூட கூட்டம் நெருக்கியடித்து படாத பாடுபடுத்தியது.
இன்னொரு பக்கம் முதல்வர் உடல் அருகில் இருந்த சில விஐபிக்கள் சிரித்த மேனிக்குப் போஸ் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
அதில் ஒருவர் கருணாஸ். முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு சில அடி தூரம் முன்பாக, ரசிகர் ஒருவருடன் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவால் அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட கருணாஸ், உணர்ச்சிபூர்வமான அந்த இடத்தில் இதுபோல் சிரித்தபடி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளது பலரின் கண்டனத்திற்கும் ஆளாக்கியுள்ளது.