கருணாஸ் பாட... அதிமுகவினர் தாளம் போட... ஜெ., ரசிக்க...: களை கட்டிய சட்டசபை
சென்னை: சட்ட சபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசி முடித்ததும், அதனை வரவேற்று பேசிய முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த எம்எல்ஏ கருணாஸ், பாடிய பாடலை கேட்டு முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ரசித்து கேட்டனர்.
சட்டசபையில் இன்று 110 விதி கீழ் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஜெயலலிதா. சிறைத்துறையில் காணொலி காட்சி, சிசிடிவி கேமராக்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை இணையத்தில் பார்த்து ரசிக்கும் வசதி என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஜெயலலிதா, வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்று, எம்.எல்.ஏ.,க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் பேசினர்.
தெய்வமே தெய்வமே...
கருணாஸ் எம்.எல்.ஏ பேசும்போது, தெய்வ மகன் படத்தில் வரும், 'தெய்வமே தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே; தேடினேன், தேடினேன்... கண்டுகொண்டேன் அன்னையை...' என்ற பாடலை, ராகத்துடன் பாடினார். இது கருணாஸ் லொடுக்குப்பாண்டியாக அறிமுகமான நந்தாவில் பாடி பிரபலமான பாடலாகும்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆரவாரம்
கண்டுகொண்டேன் அன்னையை' என்று கருணாஸ் கூறும்போது, முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை எடுத்து காண்பித்தார்.அதை கண்ட அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஒட்டுண்ணி, சாறுண்ணி
கருணாஸ் மேலும் பேசும் போது தாவரங்களில், சாறுண்ணி, ஒட்டுண்ணி என, இரண்டு வகை உண்டு. சாறுண்ணி, ஏதேனும் ஒரு தாவரத்தில் அமர்ந்து வளரும்; அதனால், அந்த தாவரத்திற்கு, எந்த பாதிப்பும் ஏற்படாது. சாறுண்ணி போன்றவர் முதல்வர்.
துரோகம் செய்தவர்கள் யார்
ஒட்டுண்ணி குறித்து, நான் எதுவும் கூற வேண்டியதில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய திட்டங்களை, பக்கத்து மாநிலங்களுக்கு போகச் செய்து, துரோகம் செய்தவர்கள் என்று கருணாஸ் கூறினார்.
நீங்க நல்லா இருக்கோணும்
நகைச்சுவையாக பேசிய கருணாஸ், தன் பேச்சை முடிக்கும்போது, 'நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற... இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற...' என்றும், 'நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே... நீங்க நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே...' என்ற எம்.ஜி.ஆர்., படப் பாடலை ராகத்துடன் பாடினார்.
ரசித்து சிரித்த ஜெ...
கருணாஸ் பாடியதற்கு ஏற்ப அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மேஜையில் தாளம் போட்டனர். அப்போது முதல்வர், ஜெயலலிதா ரசித்து சிரித்தார். கார சார விவாதங்களினால் நேற்று அமளியான சட்டசபை, கருணாஸ் செய்த கச்சேரியால் கலகலப்பாக மாறி களை கட்டியது.
தங்கத்தாரகையே வருக
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, 'தங்கத் தாரகையே வருக... வருக...' என துவங்கும், முதல்வர் வரவேற்பு பாடலின் சில வரிகளை ராகத்துடன் பாடினார். அதை கேட்டு முதல்வர் சிரித்தார். பேசி முடித்ததும், முதல்வர் இருக்கை அருகே வந்து, தரையை தொட்டு கும்பிட்டு, முதல்வரை வணங்கினார்.
சட்டமன்றமா? பாட்டுமன்றமா?
தினம் தினம் அமளி, வெளிநடப்புகளுக்கு இடையே இப்படி கச்சேரிகளும் நடந்தால்தான் சட்டசபை நடவடிக்கைகளும் மறக்கமுடியாத அனுபவங்களாக இருக்கும். அந்த காலத்தில் அரசர்களை பாட சில புலவர்கள் இருப்பார்கள். விகடகவிகள் நகைச்சுவையாக பேசி சிரிக்க வைப்பார்கள் சட்டசபையின் அனலை தணிக்க இப்போது கருணாஸ் எம்.எல்.ஏ இருக்கிறார் என்று பேசிக்கொள்கின்றனர் அறிமுக எம்.எல்.ஏக்கள்.