திமுகவை அழிக்க கருணாநிதி மட்டுமே போதும்.... அதிமுக 'ரிட்டர்ன்' கருப்பசாமி பாண்டியன் காட்டம்
சென்னை: திமுகவை அழிக்க அக்கட்சித் தலைவர் கருணாநிதி மட்டுமே போதும் என்று அதிமுகவுக்கு திரும்பிய கருப்பசாமி பாண்டியன் சாடியுள்ளார்.
அதிமுக தலைமையுடன் மோதிக் கொண்டதால் திமுகவுக்கு தாவியவர் கருப்பசாமி பாண்டியன். திமுகவில் நெல்லை மாவட்ட செயலராகவும் அவர் இருந்து வந்தார்.
அப்போது பெண் ஒருவர் கருப்பசாமி பாண்டியன் மீது புகார் கொடுக்க பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நெல்லை மாவட்ட செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பல மாத காத்திருப்பு
பின்னர் அதிமுகவுக்குப் போகப் போவதாக கூறி வந்தார் கருப்பசாமி பாண்டியன். ஆனால் அவரை உடனே அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாமல் காத்திருக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா. இந்த நிலையில் இன்று ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் ஒருவழியாக இணைந்துவிட்டார் கருப்பசாமி பாண்டியன். அதிமுகவுக்கு மீண்டும் திரும்பியது குறித்து கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளதாவது:
கடவுளோட அனுக்கிரகம் வேணும்
எது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும். நாம் எதை நினைத்தாலும், அதை நிறைவேற்றுவதற்கு கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்தது நடக்கும். தேர்தல் நேரத்தில் என்னைச் சேர்ப்பதில் என்ன பிரச்னை இருந்ததோ தெரியவில்லை. நான்கு நாட்களுக்கு முன்பு அம்மா என்னை வரச் சொல்லி உத்தரவிட்டார். உடனே கிளம்பி வந்துவிட்டேன்.
அரசியலில் மறுபிறப்பு
என் வாழ்நாளில் இன்று மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மிகுந்த முகமலர்ச்சியோடு முதல்வர் ஜெயலலிதா என்னை வரவேற்றார். மிகுந்த மகிழ்ச்சி என்றார். நான் அவரிடம், என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள். என்னுடைய வாழ்வின் இறுதிக்காலம் வரையில் விசுவாசத்தோடு கட்சிக்கு உழைப்பேன் என்றேன். மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அரசியலில் மறு பிறப்பை எடுத்திருக்கிறேன். மகிழ்ச்சியோடு ஊருக்குச் செல்கிறேன்.
கருணாநிதி போதும்...
திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. கருணாநிதி மட்டும்போதும். மாநில அளவில் கட்சி இரண்டாக இருக்க வேண்டும். மாவட்ட அளவில் மூன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார். ஒரு மாவட்டத்தில் ஒரு தலைமையின் கீழ் இயங்கினால், இன்னொருவரைக் கொம்பு சீவி வளர்ப்பது தி.மு.கவில் சகஜம்.
ஸ்டாலினை ஆதரித்ததுதான் காரணம்...
திமுகவில் நான் செய்த ஒரே குற்றம், ஸ்டாலின்தான் கட்சிக்குத் தலைமையேற்க வேண்டும் என்று சொன்னதுதான். இதை கருணாநிதி, கனிமொழி, அழகிரி ஆகியோரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 3 பேரும் என் முகத்திற்கு நேராகவே எதிர்ப்பைக் காட்டினார்கள். கோபித்துக் கொண்டார்கள்.
கருணாநிதி கடுப்புக்கு காரணம்...
குறுநில மன்னர்களாக இருப்பதால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றோம் என்றார் கருணாநிதி. அதை என் மனது ஏற்றுக் கொள்ளவில்லை. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஸ்டாலின் பின்னால் நிற்கிறார்கள் என்பதால்தான் மாவட்டங்களைத் துண்டாடினார்கள். நான் பொறுப்பில் இருந்து விலகியபோது ஒன்றைத்தான் சொன்னேன். கலெக்டராக வேலை பார்த்த மாவட்டத்தில் தாசில்தாராக வேலை பார்க்க முடியாது என்றேன். இந்த வார்த்தைகள் கருணாநிதிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
கருணாநிதி கேட்ட கேள்வி
ஒருமுறை அவருடைய வீட்டிற்குப் போனபோது, என்ன வழி தவறி வந்துட்டியா? என்றார். மனதுக்குள் இருந்த வருத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தேன். விசுவாசத்தைச் செயலில் காட்டுங்கள் என்றார். விசுவாசத்திற்கே மரியாதை இல்லாதபோது, அங்கிருப்பதில் என்ன பயன் என்பதால் வெளியேறினேன்.
இவ்வாறு கருப்பசாமி பாண்டியன் கூறினார்.