விசாரணை என்ற பெயரில் விவசாயிகளுக்கு அடி உதை- கரூரில் சாலை மறியல்
கரூர்: இளம்பெண் கொலை வழக்கில் விசாரணை என்கிற பெயரில் விவசாயிகளை அழைத்துச் சென்று போலீசார் அடித்து துன்புறுத்துவதாக கூறி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கரூர் - திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள பிச்சம்பட்டியைச் சேர்ந்த வினிதா (17) என்கிற இளம்பெண் கடந்த ஜுன் மாதம் 23-ஆம் தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது குறித்து கரூர் மாவட்ட போலீசார் 13 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், வினிதா கொலை செய்யப்பட்ட அன்று செல்போன் டவர் மூலம் அப்பகுதியில் தொலைபேசி மற்றும் அலைபேசியில் பேசியவர்களை போலிசார் அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த பகுதி விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரபட்டவர்களையும் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிச்சம்பட்டி அருகில் உள்ள கோவக்குளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (47). மலையாளி (27), பாக்கியராஜ் (29), கார்த்திக் (25) ஆகியோரை கடந்த 12-ந் தேதி அதிகாலை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஆனால் இரண்டு நாட்களாகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.
மேலும் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாததால் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாது அந்த கிராமமே தவித்தது.
இந்த நிலையில் கிராமத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு கரூர் திருச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து குளித்தலை டி.எஸ்.பி. ஜமீம், குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது