காவிரி ஆற்றில் மீன்பிடிக்கும் கரூர் மீனவர்களின் சோகக் கதை!
கரூர்: கரூர், காவிரி ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும், மீன்களை விற்பனை செய்வதற்கு மீன்அங்காடி அமைத்து தரவேண்டும் என்றும் மாயனூர் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மாயனூரில் குளித்தலை வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 700 உள்நாட்டு மீனவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள் கரூர் மாவட்டம் அயலூர் முதல் திருச்சி மாவட்டம் எலமனூர் வரை சுமார் 50கி.மீ. தூரத்திற்கு காவிரி ஆற்றில் மீன்பிடித்து வருகின்றனர். பல தலைமுறைகளாக சிறுபரிசல்கள் மூலமும், தண்ணீரில் நீந்திச்சென்றும் மீன்பிடித்து வரும் இவர்களுக்கு மீன்வலை, தூண்டில், கயறு, மிதவை, ஊசி, தண்ணீக்குள் பார்க்கும் கண்ணாடி, போன்ற உபகரணங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்றும் உயிரை பணயம் வைத்தது வயிற்றுப்பிழைப்பிற்காக மீன்பிடித்து வாழும் எங்களுக்கு, நாங்கள் பிடித்த மீன்களை விற்பனை செய்வதற்காக மீன் விற்பனை அங்காடி கட்டித்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு விற்பனை ஆகும் கெண்டைமீன், ஜிலேபிமீன், கெழுத்திமீன் ஆராமீன், ஈட்டிமீன், விரால்மீன் ஆகிய சுவைமிகுந்த புரோட்டீன் சத்துள்ள இந்த மீன்களை வாங்குவதற்கு கரூர் மாவட்ட பகுதிகளில் மட்;டுமல்லாது திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.