"ஜெ.வுக்கும்.. ஜெ.வுக்கும்" ரசிகர் மன்றம் தொடங்கும் நரிக்குறவர்கள்.. கரூரில் களேபரம்!!
கரூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதாவுக்கு ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாக கரூர் மாவட்ட நரிக்குறவர்கள் கூறியுள்ளனர். இந்த ரசிகர் மன்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்திக்கும் சேர்த்துத்தான் என்றும் கூறி அசத்தியுள்ளனர் இந்த நரிக்குறவர்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் தமிழகம் முழுவதும் உள்ள நரிக்குறவர்களைத் திரட்டி, ஜெயலலிதாவுக்காக காவடி தூக்கி, பால் குடம் ஏந்தி, கோவில் கோவிலாக உருண்டு, அமைச்சர்களுக்கு பெருத்த போட்டியாக மாறி விடுவார்கள் போல. அப்படி ஜெயலலிதா மீது பாசத்தைப் பொழிந்துள்ளனர் இந்த கரூர் நரிக்குறவர்கள்.
அப்படி என்னதான் நடந்தது....?
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் நரிக்குறவர் நல வாரியம் மூலம் ரூ 7 ஆயிரத்து 500 க்கு காசோலை கொடுத்து 52 நபர்களை குஷிப்படுத்தியுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை கிராமம், பஞ்சமாதேவி பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர் வேட்டைக்காரன் புதூர் பகுதியில் வசிக்கும் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன், உ.துரைகண்ணன், கொ.இளங்கோ, வடிவேல், துரைராஜ், ராதா, சுகுமார் உள்ளிட்ட 52 பேருக்கு நரிக்குறவர் நல வாரியம் மூலம் தலா ரூ 7 ஆயிரத்து 500 பேருக்கு நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ளார்.
காசோலையை பெற்றுக்கொண்ட நரிக்குறவர்கள் அம்மா ஜெ வாழ்க, அம்மா ஜெ வாழ்க என்று கோஷத்துடன் வெளி வந்தனர். மேலும் ஜெ வுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நரிக்குறவர்கள் சங்க தலைவர் தா.சின்னதாயி (எ) கஜேந்திரன் தெரிவித்தார்.
சரி ஜெ. என்றால் எந்த ஜெ.. ஜெயலலிதாவா அல்லது கலெக்டர் ஜெயந்தியா என்று கொக்கியைப் போட்டபோது, சாமியோ! அம்மா ஜெயலலிதா ஆட்சியில் சொல்லியதை மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி நிறைவேற்றுகிறார்கள். ஆதலால் இருவருக்கும் நன்றி தானே ! எங்கள் ரசிகர் மன்றம் இருவருக்குமே என்று பதிலுக்கு கொக்கியைப் போட்டார் கஜேந்திரன்.
பலே பலே!