பேசாமல் உதசீனப்படுத்தியதால் கொன்றேன்... கரூர் மாணவி சோனாலியை அடித்துக் கொன்ற கொலையாளி வாக்குமூலம்
கரூர்: என்னிடம் பேசாமல் என்னுடைய காதலை உதாசீனப்படுத்தியதால் ஆத்திரத்தில் சோனாலியை அடித்துக்கொன்றேன் என்று கரூரில் கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற உதயகுமார் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கரூர் பொறியியல் கல்லூரியில் உதயகுமார், கடந்தாண்டு மூன்றாமாண்டு சிவில் என்ஜினியரிங் படித்துள்ளார். கல்லூரியில் செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என்றால் 80 சதவீத வருகை பதிவேடு வேண்டும். ஆனால், உதயகுமார் மற்றும் இவரது நண்பர் பவித்திரன் உட்பட சிலருக்கு 65 சதவீதமே வருகை பதிவு இருந்துள்ள காரணத்தினால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. மேலும் உதயகுமாரின் நடத்தை குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றதன் அடிப்படையில் கடந்த ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டான். இதனால் உதயகுமார், சொந்த ஊருக்கு சென்று விட்டான்.
நேற்று கல்லூரிக்கு வந்த மாணவன், வகுப்பறையில் மாணவி சோனாலியை வெறியோடு தாக்கினான். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். கருரில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் மாணவி சோனாலி, ஆனால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி நேற்று மாலை உயிரிழந்தார்.
தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்ற டவுன் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த மாணவ, மாணவிகளிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தினர். பின்னர் கல்லூரி அருகே உள்ள மண்மங்கலத்தில் பதுங்கி இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பின்னர் உதயகுமாரை டவுன் போலீசார் நேற்றிரவு 9 மணியளவில் திருச்சி சிறையில் அடைத்தனர்.
உதயகுமார் மீது தகாத வார்த்தையால் திட்டியது(294பி), தடுக்க வந்தவர்களை தாக்கியது(324), கொலை மிரட்டல் விடுத்தது(506/2) மற்றும் கொலை செய்தது(302) போன்ற 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
சோனாலி கொலையில் பிடிபட்ட உதயகுமாரிடம் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சோனாலியை கொன்றது ஏன் என்று கூறியுள்ளார்.
சோனாலி அமைதியாகவும், அழகாகவும் இருப்பார். இதனால் என்னை ஈர்த்தார். அவரை ஒரு வருடமாக காதலித்து வந்தேன். என்னிடமும் போனில் சோனாலி பேசி வந்தார். என்னை நடத்தை சரியில்லை என்று கல்லூரி நிர்வாகம் நீக்கிவிட்டது. இதில் இருந்து என்னிடம் பேசுவதை சோனாலி தவிர்த்து விட்டார். சோனாலியிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும் என்னால் முடியவில்லை.
என்னையும், எனது காதலையும் மதிக்கவில்லையே என்று வேதனைப்பட்டேன். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஒரு முடிவுடன் கல்லூரிக்கு வந்தேன். காவலாளியும் என்னை நம்பி, கல்லூரிக்குள் நுழையவிட்டுவிட்டார். எனது நண்பன் பவித்ரனிடம், சோனாலி இருக்கும் வகுப்பறையை கேட்டறிந்து கொண்டேன். அவன் அடையாளம் காட்டியதும், வகுப்பறைக்குள் ஆத்திரத்துடன் நுழைந்தேன். சோனாலி என்னைப் பார்த்ததும் அதிர்ந்தாள். அவளுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
வகுப்பறையில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து அவள் தலை மீது தாக்கினேன். என்னைத் தடுக்க வந்த ஆசிரியர்களையும், மாணவர்களையும் வெறித்தனமாகத் தாக்க முயன்றேன். இதனால், அவர்கள் பயந்து ஓடிவிட்டனர். பின்னர் நான் தப்பிவிட்டேன் என்று உதயகுமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.