கரூர்-திருச்சி பயணிகள் ரயிலில் தீ: பெரும் விபத்து தவிர்ப்பு
கரூர்: கரூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் என்ஜின் திடீர் என தீப்பிடித்து எரிந்தது.
கரூரில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கரூரில் காலை 6.50 மணிக்கு கிளம்பும் ரயில் காலை 9 மணிக்கு திருச்சியை அடையும். இந்த ரயிலில் திருச்சியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், அங்கு வேலை பார்ப்பவர்கள் பயணம் செய்வது வழக்கம்.
இன்றும் அந்த ரயில் வழக்கம் போன்று காலை 6.50 மணிக்கு கிளம்பியது. கரூர் ரயில் நிலையத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீரராக்கியம் பகுதியில் செல்கையில் ரயில் என்ஜினில் திடீர் என தீப்பிடித்து புகையாக வந்தது.
உடனே ரயிலை நிறுத்தி ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
புகை வந்ததும் ரயிலை நிறுத்தி பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில் வீரராக்கியம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் பயணம் செய்தவர்கள் பேருந்துகள் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
என்ஜினில் எப்படி தீப்பிடித்தது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.