For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி

Google Oneindia Tamil News

கரூர்: கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்து அதிசயிக்க வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்கதும், மிகத் தொன்மை வாய்ந்த கலை பரத கலையாகும். பரதநாட்டியம் பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதே வேளையில் பரதம் என்ற சொல் ப-பாவம், ர-ராகம், த-தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் பாவம் - உணர்ச்சியையும், ராகம்-இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். தற்போது இக்கலை மேற்கத்திய நடனத்தின் மோகத்தால் அழிந்து வரும் நிலையில் பரத கலையில் மிகுந்த நாட்டம் கொண்டு தன்னையே அதற்காக அர்ப்பணித்து, கலையை வளர்க்கும் நோக்கத்தோடு இந்தியாவில் உள்ள 18 சித்தர்கள் கோவில்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி.

கரூர் கிழக்கு நஞ்சைய தெருவில் வசித்து வருகிறார். பாரதியின் தந்தை நாகராஜன் ஜவுளி தொழில் ஏற்றுமதி செய்து வருகிறார். தாய் மகாலட்சுமி கணவருக்கு உதவியாக உள்ளார். சகோதரர் பாலுச்சாமி எம்.பி.ஏ. பட்டதாரி.

பாரதி தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய பட்ட படிப்பு படித்து வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் அவர் நடனம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது கிடைத்த இடைவெளியில் அவர் அளித்த பேட்டியிலிருந்து....

நான் 4-வது படிக்கும்போது பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் வீட்டின் அருகில் உள்ள சுஜாதா என்பவரை குருவாக ஏற்று பரத கலையை கற்று தேர்ந்தேன். பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவலோநாதன் என்பவரிடம் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டிகளில் பலமுறை முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு பரதநாட்டியத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தேன்.

அதன் பிறகு தஞ்சை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய பட்டய படிப்பு முடித்த நான் அதற்கான ஆசிரியர் பயிற்சியும் முடித்தேன்;. மேலும் பரதகலையை பற்றி அறிய தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறேன். என்னுடைய இந்த 9 வருட காலத்தில் 400-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன். கோவில்களில் மட்டுமே பரத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.

Karur woman's passion on Bharatham

தமிழக அரசின் விருதான "கலை இளமணி" விருது கரூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய "கலை இசைவாணி" "வெற்றிச் செல்வி" "இளம் நாட்டிய தாரகை" "பரதகலா நிதி" "கலை அரசி" "நவரச நாட்டிய திலகம்" "அபிநய நாட்டிய கலாமணி" "அன்னபூரணி" இதுபோன்று 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன்.

சுனாமியின் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கரூரில் பல இடங்களில் நடனமாடி பல ஆயிரத்திற்கும் மேலான தொகையை நிவாரண நிதியாக வழங்கியது எனக்கு மனநிறைவைத் தந்தது.

அதேபோல கரூரில் மாற்றுத்திறனாளிகளின் காப்பகத்தில் உள்ள வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகள் சுமார் 40 பேருக்கு கட்டணம் ஏதுமின்றி பரதநாட்டியம் கற்றுத் தந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

பரத கலை மீது எனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக அக்கலையை பரப்பும் நோக்கத்தோடு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 18 சித்தர்கள் வாழ்ந்த, முக்தியடைந்த, சன்னிதானம் உள்ள திருக்கோவில்களில் "பரத கலைப்பயணம்" என்ற பயணத்தை மேற்கொண்டு அனைத்து திருத்தலங்களிலும் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன்.

Karur woman's passion on Bharatham

இக்கலைப்பயணத்தில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 15 கோவில்களிலும், வெளி மாநிலங்களான ஆந்திராவில் திருப்பதி, கேரளாவில் திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி, உத்தரப்பிரதேசத்தில் காசி ஆகிய கோவில்கள் அடங்கும். இப்பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

இந்நிகழ்ச்சிக்காக கரூரில் கலெக்டர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதுமட்டுமின்றி தமிழ்ச்சங்கம் பரதக்கலைப் பயணத்தின் அனுபவத்தை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் கட்ட பயணமாக கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகா, உடுப்பி கிருஷ்ணர், தர்மஸ்தலா அன்னப்ப சுவாமி, சிருங்கேரி சாரதாம்பாள், கொரநாடு அன்னபூரணி, கட்டல் துர்கா பரமேஸ்வரி கோவில்களில் பரத நிகழ்ச்சி நடத்தியுள்ளேன் என்று கூறினார்.

உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று கேட்ட போது உலகெங்கும் சென்று பரதகலையை பரப்ப வேண்டும். இக்கலையில் ஆர்வம் உள்ள ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவசமாக நாட்டியம் கற்றுத் தரவேண்டும். பிற்காலத்தில் நாட்டியக் கல்லூரி அமைத்து அதன் மூலம் பரதக்கலையை வளர்க்க வேண்டும் என்றார் பாரதி.

English summary
Bharathi from Karur is passionate about Bharatha Naatiyam and is teaching the art to the children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X