கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி கதிராமங்கலத்தில் உண்ணாவிரதப் போராட்டம்- வீடியோ
கதிராமங்கலம் பொதுமக்கள், போலீசார் கைது செய்த 10 பேரை விடுவிக்கக் கோரியும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேறவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை: கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது, ஊர்மக்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரையும் விடுக்க வேண்டும் எனவும் ஒன்.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும் கூறி பொதுமக்கள் ஊர் பொது இடத்தில் கூடி விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். இருந்தும் அரசு அவர்களது போராட்டத்துக்கு செவிமடுக்கவில்லை.
இந்நிலையில், இன்று ஊர் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரின் பிணை வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போதாவது தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களை வெளியே விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.