கதிராமங்கலத்தை விட்டு போலீஸ் வெளியேற வேண்டும் - வைகோ
கதிராமங்கலத்தை விட்டு போலீஸ் வெளியேற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நெல்லை: கதிராமங்கலத்தை விட்டு 9ஆம் தேதிக்குள் போலீஸ் வெளியேற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கதிராமங்கலத்தில் கடந்த 30ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. காவல்துறையினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசியல் கட்சித்தலைவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
நாட்டில் மக்கள் கிளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், ராணுவத்தை கொண்டு கிளர்ச்சியை ஒடுக்க முடியாது என்றும் கூறினார்.
மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டின் பன்முக தன்மை சிதைக்கப்பட்டால், இந்தியா ஒரேநாடாக இருக்காது என்றும் வைகோ கூறினார்.
மேலும் பேசிய வைகோ, கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறியதால் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் ஒருவித அச்சம் நிலவுகிறது. எனவே கதிராமங்கலத்தை விட்டு 9ஆம் தேதிக்குள் போலீசார் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.