கதிராமங்கலம் மக்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் எடப்பாடியின் 'அபாண்ட புளுகு'! #kathiramanglam
கதிராமங்கலம் மக்களை வன்முறையாளர்களாக சித்தரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அபாண்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.
சென்னை: கதிராமங்கலம் மக்கள் கல்வீசினார்களாம்; அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தார்களாம்; அதனால் போலீசார் குறைவான தடியடி நடத்தினார்கள் என சட்டசபையில் கூசாமல் வன்முறையாளர்களாக முத்திரை குத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு விளைநிலங்கள் பாழகிக் கொண்டிருந்தன. பதைபதைத்துப் போன பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியரும் இதோ வருகிறேன்.. வருகிறேன் என கூறிக் கொண்டே காலம் தாழ்த்துகிறார். ஒருநாள் பகல் பொழுது முடிந்து போன நிலையில் மாலையில் காவல்துறை கண்காணிப்பாளர் கதிராமங்கலம் வருகிறார்.
தீ வைத்த போலீஸ்
மக்களோ ஆட்சியர்தான் என முண்டியடித்துக் கொண்டு வர போலீஸ் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டியது. எண்ணெய் குழாய் கசிவு இருந்த இடம் அருகே வைக்கோல்போருக்கு போலீசாரே தீவைத்தனர்.
கொடூரமாக தடியடி
தீ பற்றி எரிவதைக் கண்டு பதறிப் போய் நின்ற மக்களை குறிவைத்து ஈவிரக்கமே இல்லாமல் கொடூரமாகத் தாக்கியது போலீஸ். போராட வந்த பெண்களை போலீசின் குண்டாந்தடிகள் ஈவிரக்கமே இல்லாமல் தாக்கியது.
வழக்குகள் பாய்ந்தன
கதிராமங்கலத்தின் மனசாட்சி சொல்லும் இந்த நிஜத்தை. இப்போது கதிராமங்கலத்தில் அதிகாரிகளை செயல்படவிடாமல் தடுத்ததற்காக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்குகள் பாய்ந்துள்ளன.
வன்முறையாளர்களாக சித்தரிப்பு
அத்துடன் சட்டசபையில் கூசாமல் ஒரு முதல்வர், மக்கள் கல்வீசித் தாக்கினார்கள் என வன்முறையாளர்களாக முத்திரை குத்தியிருக்கிறது. எந்த ஒரு மாநில முதல்வரும் சொந்த மண்ணின் மக்களை வன்முறையாளர்கள் என முத்திரை குத்தியதாக இல்லை.
அதுசரி திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண்களை அடிக்கவே இல்லை என்று பச்சை பொய் சொன்ன அரசுக்கு தலைமை வகிப்பவரிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?
சாமளாபுரத்தில் போலீசாரே வாகன கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் வெளியான பின்னரும் பொய்யை மட்டும் பேசுவதாக உறுதியுடன் இருக்கும் அரசாங்கத்திடம் நீதியையும் நியாயத்தையுமா எதிர்பார்க்க முடியும்?