கர்ப்பம் எனக்கூறி 8 மாதம் கட்டிக்கு சிகிச்சை அளித்த விவகாரம்.. தமிழக அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கர்ப்பம் எனக் கூறி எட்டு மாதங்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக அரசிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கர்ப்பம் எனக்கூறி, கட்டிக்கு கடந்த எட்டு மாதங்களாக மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக, மருத்துவ கல்வி இணை இயக்குனர் சபீதாவின் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அமீர் அலி (29) என்பவரின் மனைவி அஷினா (28). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வயிற்று வலி காரணமாக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசினர் தாய் சேய் நல மருத்துவமனையில் அஷினா சேர்ந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஷினா கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதை தொடர்ந்து, அஷினாவுக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் அஷினா அந்த மருத்துவமனையில் பரிசோதனை செய்துவந்துள்ளார். அப்போதெல்லாம் குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இம்மாதம் 8ம் தேதி பிரசவத்திற்கு தேதி அளித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 21-ம் தேதி ஹசீனாவிற்கு வயிற்று வலி அதிகமாகவே, அவர் சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதைக் கேட்டு ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். வயிற்றில் இருந்த கட்டியினை கர்ப்பம் என கூறி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்து வந்தது அம்பலமானது. இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவ கல்வி இணை இயக்குனர் சபீதா விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக அந்த விசாரணை அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.