தூய்மை இந்தியா திட்டத்திற்கு “இ-வேஸ்ட்” கண்காட்சி மூலம் அடித்தளம் – காவேரி பொறியியல் கல்லூரி
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரியில் அமைந்துள்ள காவேரி பொறியியல் கல்லூரியில் "இ-வேஸ்ட்" எனப்படும் எலக்ட்ரானிக் பொருட்களால் ஏற்படும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் திட்டப்பணி செயல்பாடுகள் குறித்த கருத்தாய்வும் நடைபெற்றுது.
பிரதமர் நரேந்திர மோடி, "தூய்மை இந்தியா" என்ற தலைப்பில் நாட்டில் பெருகி வருகின்ற குப்பை, கூளங்களை அகற்றி நாட்டினை சுத்தமாக்கும் திட்டத்தில் மாணவர்களையும் இணைந்து செயல்பட கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனடிப்படையில், எலக்ட்ரானிக் பொருட்களால் ஏற்படும் கழிவுகளும் ஆபத்தானவையே, அவற்றை சரியான முறையில் கையாளவேண்டும் என்ற விழிப்புணர்வினை உருவாக்கும் வகையில் காவேரி பொறியியல் கல்லூரி இந்த கண்காட்சியினை நடத்தியுள்ளது.
இக்கண்காட்சியில், "எலக்ட்ரானிக் கழிவுகள்" குறித்த தகவல் மற்றும் அவற்றின் அபாயங்களை விளக்கும் வகையிலான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
மேலும், இந்த புகைப்படக் கண்காட்சியுடன் கூடவே முழுவதுமாக எலக்ட்ரானிக் குப்பைகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட "ஹ்யூமனாய்டு" ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
காவேரி கல்லூரியின் கணினியியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு "பொது சுகாதாரம் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகள் மேலாண்மை" என்று பெயரிடப்பட்டிருந்தது. கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்த கருத்தாக்க நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடையே எலக்ட்ரானிக் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
காவேரி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வி. வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்ற "மகா குருசேத்ரா 2014" என்ற இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டுக் கருத்தரங்கத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தூய்மை இந்தியா பிரச்சாரத்திற்கு வழிகோலியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.