அறவழியில் போராடியவர் ஐ.என்.டி.யு.சி முன்னாள் தலைவர் ராமானுஜம்: உம்மன் சாண்டி
சென்னை: தொழிற்சங்க செயல்பாடுகளில் அறவழியில் போராடி தொழிலாளர்கள் நலனைப் பாதுகாத்தவர் ஐ.என்.டி.யு.சி.யின் மறைந்த தலைவர் ஜி.ராமானுஜம் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜி.ராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராமனுஜத்தின் வாழ்க்கை வரலாறு புத்தத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஐ.என்.டி.யு.சி.யின் தேசிய தலைவர் சிரஞ்சீவி ரெட்டி உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட்ட நிறுவனங்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், செயல் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், ஜி.ராமானுஜத்தின் உருவச் சிலையை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்து, பேசிய உம்மன் சாண்டி, தொழிற்சங்கங்கள் என்றாலே வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என்று இருந்த காலகட்டத்தில் அமைதியான வழியில் போராடியவர் ராமானுஜம் என்றார்.
மாற்றுப் பாதையில் செயல்பட்டு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வெற்றி கண்டவர். சிறந்த தொழிற்சங்க நிர்வாகியான இவர், நாட்டின் முதல் இரண்டு தொழிலாளர் ஆணையக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் என்றும் உம்மன்சாண்டி கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், படித்துப் பட்டம் பெற்றவர்கள் மத்தியில், அனுபவத்தின் மூலம் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு தொழிற்சங்க செயல்பாடுகளில் சிறந்து விளங்கியவர் ராமானுஜம். காந்தியக் கொள்கைகளை தொழிற்சங்க போராட்டப் பாதையில் கையாண்டதன் மூலம் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் காட்டியவர் ராமானுஜம் என்று கூறினார்.