தமிழக காய்கறிகளுக்கு தடை இல்லை.. கேரள அமைச்சர் உறுதி..
சென்னை: தமிழகத்தில் பயிரிடப்படும் காய்கறிகளுக்கு கேரளாவில் தடை விதிக்கப்படாது என்று அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபிஜான் உறுதியளித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவரிடம் தமிழக காய்கறிகளுக்கு கேரளாவின் தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிபு பேபி ஜான், தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக நாங்கள் கருதவில்லை என்று தெரிவித்தார்.
எனவே தமிழகத்தில் விளையும் காய்கறிகளுக்கு கேரளாவில் தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கேரள அமைச்சரின் இந்த அறிவிப்பால் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் வழக்கம் போல் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும்.
முன்னதாக தமிழகத்தில் பயிரிடப்படும் காய்கறிகளில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து கலந்து நச்சுத்தன்மையாக இருப்பதாக கேரள மாநிலத்தில் வதந்தி பரவியது. இதனால் தேனி, திண்டுக்கல், கோவை உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் கேரள மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.