மக்கள் நிம்மதியை கெடுத்து விட்டது மோடி அரசு.. கையில் கட்டுடன் குஷ்பு ஆவேசப் பேச்சு!
சென்னை: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சீர்குலைத்து விட்டனர். ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் மோடி அரசு சாதனை எதையுமே செய்யவில்லை. மாறாக மக்களின் நிம்மதிதான் சுத்தமாக பறி போய் விட்டது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நடிகை குஷ்பு.
தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் செவ்வாக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூறுநாள் தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தை பாரதீய ஜனதா அரசு ரத்து செய்ய முயற்சிப்பதை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். கையில் கட்டுடன் அவர் ஆவேசமாக பேசினார்.
குஷ்பு பேச்சிலிருந்து....
குடும்பச் செலவில் கை வைத்த மோடி அரசு
பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக இந்த 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்த திட்டத்துக்கும் மோடி அரசு வேட்டு வைக்க பார்க்கிறது. இதனை ரத்து செய்து ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை கெடுக்க பார்க்கிறது.
வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு
கிராமப்புற பெண்கள் மற்றவர்களை சார்ந்து இருக்காமல் சுயமாக இந்த வேலையில் ஈடுபட்டு குடும்ப செலவை கவனித்து கொண்டனர். ஆனால் அவர்களது வாழ்க்கையிலும் மோடி அரசு விளையாடுகிறது.
மக்கள் நிம்மதி போச்சு
பாரதீய ஜனதா ஆட்சியில் மக்கள் யாருக்கும் நிம்மதியாக இல்லை. தமிழகத்தில் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் இதே நிலைதான். ஜாதி, மத கலவரம் எங்கு எப்போது நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது.
என்ன சாதித்தார்கள்
இந்த அரசு ஆட்சி செய்த 7 மாதத்தில் என்ன சாதித்தார்கள்? காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களைத்தான் மோடி அரசு செயல்படுத்துகிறது.
ஒப்பந்தம் புதிதல்ல
அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது புதியது அல்ல. 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது மோடி போட்டு இருக்கிறார்.
மக்கள் திட்டத்தை ரத்து செய்ய விட மாட்டோம்
காங்கிரஸ் அரசு 10 வருடங்களில் செய்த சாதனைகளை 100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது. மக்கள் திட்டங்களை ரத்து செய்ய விடமாட்டோம். இதற்காக ஒன்று சேர்ந்து போராடுவோம் என்றார் அவர்.