காங்கிரஸ் கட்சி அளித்த இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்று நோன்பு கஞ்சி குடித்த குஷ்பு, திருமா
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடிகையும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கலந்து கொண்டார்.
புனித ரமலான் மாதம் நடந்து கொண்டிருக்கிறது. உலக முஸ்லீம்கள் நோன்பு வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ஜே.எம். ஆரூண் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், புதிய தமிழகம் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., இந்திய தேசிய முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருநாவுக்கரசர், கட்சியின் துணை தலைவர் ஹெச். வசந்தகுமார், செய்தித் தொடர்பாளர் குஷ்பு, மூத்த தலைவர் குமரி அனந்தன், மாநில பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, இளைஞரணி முன்னாள் செயலாளர் எஸ்.அப்துல் சமது, மாவட்ட பொதுச் செயலாளர் அகமது அலி, கோபண்ணா என கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.