ஜெ. சொத்து ஆவணங்களை மட்டுமே குறிவைத்து கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை?
ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்களை குறிவைத்து கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்ததா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்: ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்களை குறிவைத்துதான் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் கும்பல் புகுந்தது. அவர்கள் காவலாளிகள் மீது நடத்திய தாக்குதலில் ஓம்பகதூர் என்ற காவலர் பலியானார்.
மற்றொரு காவலரான கிருஷ்ணபகதூர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் இல்லை
காவலாளியை கொலை செய்ததற்கு முன்விரோதம் ஏதும் இல்லை என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான முக்கிய நோக்கமே காவலாளிகளை அமைதிப்படுத்தும் முயற்சி என்றும் தெரியவந்தது.
சிசிடிவி காமிரா
அங்குள்ள ஒரு சிசிடிவி கேராவில் யாரோ ஒருவர் காரில் வந்து இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அவற்றை கோவையில் உள்ள ஆய்வகத்தில் கொடுத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சொத்து ஆவணங்களுக்கு குறி?
ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்க முயற்சியா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கொலைக்கான உண்மையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
ஜெ. அறைக்குள் நுழைந்த கொலையாளி
ஜெயலலிதாவின் அறைக்குள் அந்த கொலையாளிகள் புகுந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் விவரங்கள் விரைவில் தெரியவரும். இறந்த காவலாளியின் உடலில் அவரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காயங்கள் ஏதும் இல்லை.
நன்கு தெரிந்த நபர்கள்..
ஆகையால் ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்களை கொள்ளையடிக்க முயற்சி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கும் என்பதால் போலீஸார் மேற்கொண்டு விவரங்களை தர மறுத்துவிட்டனர். இருப்பினும் கொடநாடு எஸ்டேட் குறித்து நன்கு தெரிந்த கும்பல்தான் இந்த கொள்ளை, கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்பது போலீசாரின் சந்தேகம்.