அப்துல்கலாம் உடலை ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்..பேரன், உறவினர்கள் கதறல்
ராமேஸ்வரம்: அப்துல்கலாம் உடலை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்,என அவரது பேரன் மற்றும் உறவினர்கள் கதறியபடி கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்துல் கலாம் இறந்தது குறித்து அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் பேரன் சலீம் கூறியதாவது...
நேற்று முன் தினம் (ஜூலை 26ல்) மாலை 4 மணிக்கு தாத்தாவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். எனது நலம், அவரது அண்ணன் நலம் குறித்து விசாரித்தார்.
உறவினர் நலம் குறித்து கேட்டார். ஷில்லாங்கில் குளிர் சீதோஷ்ண நிலையாக இருந்ததால், சுவாச பிரச்னை ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த செய்தியை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
எங்கள் ஊர் மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்தபடி உள்ளனர். அவரது உடலை ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் அனைத்து மதத்தினர் மற்றும் உறவினர்களின் விருப்பம். அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று கண்ணீர் மல்க கூறினார்
அப்துல் கலாமிற்கு 3 அண்ணன்கள், ஒரு மூத்த சகோதரி உண்டு. அவர்களில் மூத்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர்,98, உடல்நலக்குறைவுடன் உள்ளார். மற்ற சகோதரர்களான முஸ்தபா கமால், காசிம் முகம்மது, சகோதரி ஆசிம் செருபா அம்மாள் ஆகியோர் இறந்து விட்டனர்.