சென்னையில் காற்றாடி மாஞ்சா நூலால் இறந்த சிறுவனின் தாய் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னையில் காற்றாடி மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவனின் தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குறிப்பாக வட சென்னையில் காற்றாடி பறக்க விடுவது அதிக அளவில் உள்ளது. இந்த காற்றாடி பறக்க விடுவது பல சமயங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது. காரணம், அந்த காற்றாடியில் கட்டப்படும் மாஞ்சா எனப்படும் கண்ணாடியால் ஆன கூழ் தடவப்பட்ட நூல்.
அப்படித்தான் கடந்த வாரம் பெரம்பூர் பகுதியில் தனது பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஜய் என்ற 5 வயது சிறுவனின் கழுத்தை எங்கிருந்தோ வந்த காற்றாடியின் மாஞ்சா நூல் பலமாக அறுத்து விட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் அஜய் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
இந்நிலையில் காற்றாடி மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவன் அஜயின் தாய் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அஜயின் தாயார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகன் உயிரிழந்த விரக்தியில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.