சு. சாமி தமிழகத்தில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும்-'கொங்கு' ஈஸ்வரன்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் பேசி வரும் சுப்பிரமணியம் சாமி தமிழகத்தில் நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுப்பிரமணியசாமியின் சமீபத்திய செயல்கள் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரோதமானதாகவே உள்ளதாகவும் ஈஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழின துரோகி
மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணிய சாமி சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் ஒட்டி உறவாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக நலன்களுக்கு எதிராகவே உள்ளன.
ராஜபக்சேவுக்கு வால் பிடிக்கிறார்
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பறிமுதல் செய்யச் சொன்னேன் என்று கூறினார். இப்போது இலங்கையில் தமிழர்ளை கொன்று குவித்தற்காக ராஜபக்சேவுக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது உச்சக்கட்டம். இதனை பொறுத்துக் கொள்ளமுடியாது.
சீர்குலைக்க முயல்கிறார்
மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அது பலனளித்து விடக் கூடாது என்பதற்காக சுப்பிரமணியசாமி செயல்பட்டு வருகிறார்.
முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறார்
சுப்பிரமணியசாமி தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதன் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தலைமையின் முயற்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுகிறது.
தடை விதிக்க வேண்டும்
தமிழர்களுக்கு எதிராகவும் தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியசாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.
மக்கள் செய்வார்கள்
தமிழக அரசு இதனை செய்யாவிட்டால் மக்களே இதனை செய்வார்கள் என்று எச்சரிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.