4 பெண்கள், புதுமுகங்கள்: சென்னை மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் பயோடேட்டா
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.
சட்டசபை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களில் முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவும் ஒருவர்.
சென்னை மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு:
ஜெயலலிதா
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். 2011ம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார். 2015ம் ஆண்டு நடந்த ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவர் 7வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். 1983ம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்ற அவர் இன்று கட்சியின் தலைவியாக உள்ளார்.
பி. வெற்றிவேல்
பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பி. வெற்றிவேல் வட சென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆவார். பி.ஏ. பட்டதாரியான அவர் 1996ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக வசதியாக ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்.
ஜே.சி.டி. பிரபாகர்
1952ம் ஆண்டு திண்டுக்கலில் பிறந்த வழக்கறிஞர் ஜே.சி.டி. பிரபாகர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழக தலைவரான அவர் 1980 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். விளையாட்டு துறையில் ஆர்வம் மிக்க அவர் சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
தாடி ம.ராசு
அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவரான தாடி ம.ராசு முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னை மாநகராட்சியின் 98வது வார்டு உறுப்பினரான அவர் போக்குவரத்துத் துறை அண்ணா தொழிற்சங்க துணை தலைவராகவும், சென்னை மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார்.
வ.நீலகண்டன்
அயனாவரத்தை சேர்ந்த வ. நீலகண்டன் திருவிக நகர்(தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். 2011ம் ஆண்டு தேர்தலிலும் அவர் திருவிக நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் கிரானைட் குவாரி தொழில் செய்து வருகிறார். முன்னதாக அவர் 1989 மற்றும் 1996ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
பரிதி இளம்வழுதி
1989ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பரிதி இளம்வழுதி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். 30 ஆண்டுகளாக திமுகவில் இருந்த அவர் 2013ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். 2011ம் ஆண்டு எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
டி. ஜெயக்குமார்
ராயுபுரம் தொகுதியில் போட்டியிடும் டி. ஜெயக்குமார் பி.எஸ்.சி. பட்டதாரி. அவரது மகன் ஜெயவர்தன் மக்களவை உறுப்பினர் ஆவார். 1991, 2001, 2006, 2011ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 2 முறை அமைச்சராக இருந்தவர். 2011-2012ம் ஆண்டு சட்டசபை சபாநாயகராக இருந்தவர்.
கே.எஸ்.சீனிவாசன்
துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் கே.எஸ்.சீனிவாசன் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர். நகை, மர வேலைப்பாடு, உலோக சிற்பங்கள் விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். துறைமுகம் மற்றும் பூங்காநகர் பகுதி செயலாளராக இருந்தவர்.
ஏ.நூர்ஜஹான்
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஏ. நூர்ஜஹான் அதிமுக தலைமைக் கழக பேச்சாளர். எம்.ஏ., எம்.பில். படித்த அவர் நந்தனம் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் தமிழ் துறை விரிவுரையாளராக இருந்தார். 2001, 2011ம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த அவரின் காதல் கணவர் ஆம்ஸ்டிராங்கும் அதிமுக நிர்வாகி.
பா.வளர்மதி
ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பா. வளர்மதி சமூக நலத்துறை அமைச்சராக உள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அச்சம்பத்து கிராமம் தான் அவரது சொந்த ஊர். 27 வயதில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனவர். 2001ம் ஆண்டில் ஆலந்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த அவர் 2011ம் ஆண்டு தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
எஸ்.கோகுல இந்திரா
கைத்தறித்துறை அமைச்சராக உள்ள எஸ். கோகுல இந்திரா அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தரிகொம்பன் கிராமத்தை சேர்ந்த அவர் ஒரு வழக்கறிஞர். 2001ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் 2011ம் ஆண்டு தேர்தலில் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
விருகை வி.என்.ரவி
எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுக வட்ட தலைவராக இருந்த ஏ. நாகலிங்கத்தின் மகன் விருகை என். ரவி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். 2013ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு பஞ்சாலை கழக தலைவராக உள்ள அவர் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
சி.பொன்னையன்
சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சி. பொன்னையன் திருச்செங்கோடை சேர்ந்தவர். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் நிதி, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். 4 முறை திருச்செங்கோடு எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
பி.சத்தியநாராயணன்
தியாகராய நகர் வேட்பாளராக சரஸ்வதி ரெங்கசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பதில் பி.சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்தியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தியா தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் ஆவார்.
ஆர்.நட்ராஜ்
முன்னாள் டிஜிபி நட்ராஜ் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர்பள்ளம் கிராமம் தான் அவரது சொந்த ஊர். 30 ஆண்டுகாலம் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி பதக்கம் பெற்றவர்.
எம்.சி.முனுசாமி
வேளச்சேரியில் போட்டியிடும் எம்.சி.முனுசாமி நீலாங்கரையை சேர்ந்தவர். 2011ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் 192வது வார்டு கவுன்சிலர் ஆனார். முதல்முறையாக அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.