பிரேமானந்தாவிடம் கணக்குப் பிள்ளையாக இருந்தவராமே பாஜகவின் ஸ்ரீரங்கம் வேட்பாளர் சுப்பிரமணியம்?
திருச்சி: சர்ச்சை சாமியார் பிரேமானந்தாவிடம் ஒரு காலத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்தவர்தான் ஆக்ஸ்போர் சுப்பிரமணியம். இப்படி பேஸ்புக்கில் ஒரு செய்தி உலா வருகிறது.
பாஜகவின் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர்தான் சுப்பிரமணியம். இவர் ஆரம்ப காலத்திலிருந்து பாஜகவில் இருந்தவர் இல்லை. இடையில் இலைக் கட்சியில் அதாவது அதிமுகவில் இருந்தவராம்.
இதுகுறித்து பேஸ்புக்கில் தகவல் பரவி வருகிறது. வாயில இருந்து லிங்கம் எடுத்தும், செக்ஸ் சர்ச்சை, கொலை உள்ளிட்ட புகார்களில் சிக்கி கைதாகி, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சிறைக்குள்ளேயே மரணத்தையும் சந்தித்த பிரேமானந்தாவிடம் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவராக இருந்தவராம் சுப்பிரமணியம்.
பிரேமானந்தாவின் சட்டவிரோதக் கறுப்புப் பணத்தைப் பினாமியாக மாற்றும் வகையில் ஒரு பொறியியல் கல்லூரியையும் ஆரம்பித்தாராம். அது ஜெயராம் என்ஜீனியரிங் கல்லூரி என்று சொல்கிறார்கள். அதேபோல, அங்காளம்மன் என்ஜீனியரிங் கல்லூரியை கையகப்படுத்தினாராம். சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவிலும் இருந்தவராம். அதன் பிறகுதான் பாஜகவுக்கு வந்தாராம்.
இப்படிப் போகிறது பேஸ்புக்கில் வலம் வரும் செய்தி.